அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்யும் வகையில், இந்தியாவிடம் மேலும் ரூ.7,628 கோடி கடன் வழங்குமாறு இலங்கை அரசு கோரியிருப்பதாக ராய்டர்ஸ் தகவலை மேற்கோள்காட்டி இலங்கை பத்திரிகை வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இலங்கைக்கு தற்போதைய தேவையாக இருக்கும் மிக அத்தியாவசியப் பொருள்களான அரிசி, கோதுமை மாவு, பருப்பு வகைகள், சர்க்கரை மற்றும் மருந்து உள்ளிட்டவற்றை இறக்குமதி செய்யும் வகையில் இந்தக் கடன் தொகையை வழங்குவதற்கு மத்திய அரசு முடிவு செய்திருப்பதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து வெளியிடப்பட்டிருக்கும் அந்நாட்டு பத்திரிகை செய்தியில், இலங்கை அரசு, அத்தியாவசியப் பொருள்களை இறக்குமதி செய்யும் வகையில், இந்தியாவிடம் மேலும் ஒரு பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.7,628 கோடி) கடன் கேட்டிருப்பதாக ராய்டர்ஸ் செய்தி தெரிவிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
ஏற்கனவே இலங்கைக்கு ரூ.7,628 கோடியை கடனாக இந்திய அரசு வழங்கியிருக்கும் நிலையில், நாட்டின் பற்றாக்குறையை சமாளிக்கும் வகையில், இலங்கை அரசால் தற்போது கூடுதலாக கடன் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பான விவாதங்கள் மிகவும் ரகசியமாக நடைபெற்றுள்ளதால், இந்த தகவல் எங்கிருந்து வெளியானது என்ற உறுதித் தன்மையை வெளிப்படுத்த இரண்டு பத்திரிகைகளும் மறுத்துள்ளன.
இலங்கை நிதியமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகமும் இது தொடர்பான கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க மறுத்துவிட்டன.
பன்னாட்டு நாணய நிதியத்தின் உதவியைக் கோரவிருக்கும் இலங்கையின் முடிவுக்கு இந்திய அரசு தனது முழு ஆதரவையும் அளித்துள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.