சூரியனில் ஏற்பட்டிருக்கும் வெப்பப் புயல் காரணமாக உலகம் முழுவதும் தொலைத்தொடர்பு மற்றும் சமிக்ஞைகள் பாதிக்கப்படும் அபாயம் இருப்பதாக தேசிய கடல் மற்றும் வளிமண்டல அமைப்பு (என்ஓஏஏ) மற்றும் வான்வெளி தட்பவெப்ப முன்கணிப்பு மையம் (எஸ்டபிள்யுபிசி) எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜி1-வகை புவிகாந்த அலை கே-இன்டக்ஸ் 5 என்ற அளவில் பூமியைத் தாக்கக்கூடும். இந்த தாக்கத்தால் பலவீனமான மின் இணைப்புகளில் சில வேறுபாடுகள் பூமியில் ஏற்படலாம் என்று என்ஓஏஏ - எஸ்டபிள்யுபிசி வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளன.
கூடுதலாக, வான்வழி போக்குவரத்து, செயற்கைக் கோள் செயல்பாடுகளில் சில இடையூறுகள் ஏற்படலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காலநிலைகளுக்கு ஏற்ப இடம்பெயர்ந்து வாழும் விலங்குகளும் கூட இதனால் பாதிக்கப்பட வாய்ப்பிருப்பதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன் தாக்கம் மைனே மற்றும் மிக்சிகன் உள்பட அமெரிக்காவின் மேல்பகுதிகளில் உணரப்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஐந்து பிரிவுகளைக் கொண்ட புவிகாந்த அலைகளில் ஜி1 என்பது மிகக் குறைந்த தாக்கத்தை ஏற்படுத்தும் வகையைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.