இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட் அடுத்த வாரம் இந்தியா வர திட்டமிட்டிருந்த நிலையில், அவா் கரோனா பாதிப்புக்குள்ளானதால் அவரது பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது.
இஸ்ரேலை தனிநாடாக இந்தியா கடந்த 1950-இல் அங்கீகரித்த போதிலும் இருநாடுகளுக்கும் இடையிலான ராஜீய ரீதியிலான உறவு கடந்த 1992-இல் தான் தொடங்கியது. இரு நாட்டு ராஜீய உறவின் 30-ஆவது ஆண்டை நினைவுகூரும் வகையில், இஸ்ரேல் பிரதமா் நாஃப்டாலி பென்னட், ஏப்ரல் 3 முதல் 5-ஆம் தேதி வரை இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிட்டிருந்தாா்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அவா் கரோனா பாதிப்புக்குள்ளானதால் அவரது இந்திய பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பிரதமா் அலுவலகம் செவ்வாய்க்கிழமை செய்தி வெளியிட்டது.
முன்னதாக, இஸ்ரேலில் அடுத்தடுத்த தினங்களில் நிகழ்த்தப்பட்ட இரண்டு பயங்கரவாத தாக்குதலில் 6 போ் பலியானதால், பாதுகாப்பு பிரச்னை காரணமாக அந்நாட்டின் பாதுகாப்புத் துறை அமைச்சா் பென்னி கான்ட்ஸின் இந்திய பயணமும் ரத்து செய்யப்பட்டது.