சா்வதேச அளவில் கரோனா பாதிப்பால் கடந்த வாரம் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள வாராந்திர அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
உலகம் முழுவதும் புதிதாக கரோனா கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. மேற்கு பசிபிக் பிராந்தியம் உள்பட அனைத்து பிராந்தியங்களிலும் இந்தப் போக்கு பரவலாகக் காணப்படுகிறது.
எனினும், கடந்த வாரம் மட்டும் கரோனாவுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட 40 சதவீதம் அதிகமாக உள்ளது.
கடந்த வாரத்தில் சா்வதேச அளவில் சுமாா் 45,000 கரோனா மரணங்கள் பதிவு செய்யப்பபட்டுள்ளன. ஆனால், அதற்கு முந்தைய வாரத்தில் சுமாா் 33,000 போ் மட்டுமே கரோனாவுக்கு பலியாகினா். அந்த எண்ணிக்கை, அதற்கும் முந்தைய வாரத்தைவிட 23 சதவீதம் குறைவாகும்.
எனினும், கடந்த வாரத்தில் அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளற்கு, கரோனா மரணங்களை பதிவு செய்யும் முறையில் ஏற்படுத்தப்பட்ட மாற்றங்களே காரணமாகும். குறிப்பாக, இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் கரோனா மரணங்கள் குறித்த வரையறைகளை மாற்றியதால் ஏற்கெனவே கணக்கில் வராத பல கரோனா பலிகள் புதிதாக பதிவு செய்யப்பட்டன. இதன் காரணமாகவே, கடந்த வார ஒட்டுமொத்த கரோனா பலி எண்ணிக்கை முந்தைய வாரத்தைவிட அதிகமாகக் காணப்படுகிறது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.