பெய்ஜிங்: கரோனா பரவல் காரணமாக ஒரு மாத காலத்துக்கும் மேல் ஷாங்காயில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டிருக்கும் நிலையில், பெய்ஜிங்கில் டஜனுக்கும் மேற்பட்ட மெட்ரோ ரயில் நிலையங்களும் பேருந்து நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
சீனத்தின் தலைநகரான பெய்ஜிங்கில் உள்ள 40க்கும் மேற்பட்ட சுரங்க ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. 158 பேருந்து வழித்தடங்களில் பேருந்துச் சேவை நிறுத்தப்பட்டுள்ளன. மூடப்பட்டிருக்கும் பெரும்பாலான ரயில்நிலையங்கள் பெய்ஜிங்கின் சோயாங் மாவட்டத்துக்குள்பட்டவையாக உள்ளன.
பெய்ஜிங்கில் மீண்டும் மிகப்பெரிய கரோனா சோதனை தொடங்கியிருக்கிறது. பெய்ஜிங்கில் உள்ள 12 மாவட்டங்களில் இரண்டாவது முறையாக மூன்றாம் சுற்று கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கடந்த வாரமும் மிகப்பெரிய அளவில் மூன்று சுற்று பரிசோதனை நடத்தப்பட்டது. பள்ளிகள் மூடப்பட்ட, வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டுள்ளன.