சியோல்: தென் கொரியாவில் புதிதாக கரோனா பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 50 ஆயிரத்துக்கும் கீழ் சரிந்துள்ளதால், பொது இடங்களில் முகக்கவசம் அணிவதில் இருந்து மக்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கொரியா நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள தகவலின்படி,
நாட்டில் கடந்த சில நாள்களாக ஒரு நாள் தொற்று பாதிப்பு குறைந்து வருவதையடுத்து, மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 49,064 பேருக்கு தொற்று பதிவாகியுள்ளது. இதையடுத்து மொத்த பாதிப்பு 17,395,791 ஆக உள்ளது.
மேலும், நேற்று ஒரேநாளில் 72 பேர் தொற்றுக்கு பலியாகியுள்ளனர். இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 23,079 ஆக உள்ளது. இறப்பு விகிதம் 0.13 சதவீதமாகும்.
சமீபத்தில் தொற்று பாதித்தவர்களில் 432 பேர் தீவிரமான சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கடந்த 18 மாதங்களுக்கு பிறகு, தற்போது பொது இடங்களில் முகக்கவசம் அணிவதிலிருந்து விலக்கு அளித்துள்ளது அந்நாட்டு அரசு. ஆனால், 50-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றாகக் கூடும் இடங்களுக்கு இந்த விலக்கு செல்லாது.
மக்கள் கூடும் இடங்களில் 1-மீட்டர் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது அவசியம். ஆனால், தற்போதைக்கு உட்புற முகக்கவசம் அணிவது அவசியம் என்றும் அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை 44.55 மில்லியன் ஆகும். இது மொத்த மக்கள்தொகையில் 86.8 சதவீதம் ஆகும்.