ரஷியா உடனான போரில் உக்ரைன் நிச்சயம் வெல்லும் என பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ரஷியப் படைகள் உக்ரைன் மீது தாக்குதலைத் தொடங்கி 2 மாதங்களைக் கடந்துள்ளது. போரில் உக்ரைனுக்கு அதிக சேதங்களை உருவாக்கியுள்ள ரஷியா தொடர்ந்து அந்நாட்டின் முக்கியப் பகுதிகளைக் குறிவைத்துக் கைப்பற்றி வருகிறது.
குறிப்பாக, மரியுபோல் போன்ற முக்கிய நகரங்கள் முழுமையாக ரஷியாவின் கட்டுப்பாட்டில் வந்துள்ளது.
சில நாள்களுக்கு முன் உக்ரைன் தலைநகர் கீவில் ரஷியப் படைகள் 2 ஏவுகணைகளை அனுப்பி தாக்குதல் நடத்தியதில் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்ததுடன் சில அடுக்குமாடிக் கட்டடங்கள் முற்றிலும் சேதமடைந்தது.
மேலும் போர் தொடங்கிய நாளிலிருந்து கடந்த மே-2 ஆம் தேதி வரை ரஷியாவின் தாக்குதலில் உக்ரைனைச் சேர்ந்த 3,153 பேர் பலியாகியுள்ளதாக ஐ.நா மனித உரிமை ஆணையம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உக்ரைன் நாடாளுமன்றத்தில் காணொலி மூலம் பேசிய பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் ‘ரஷியா உடனான போரில் நிச்சயம் உக்ரைன் வென்று சுதந்திரமாக இருக்கும். மேலும் போர் இலக்கை அடையும் வரை உக்ரைனுக்கு நிதியுதவி, ஆயுதங்கள் உள்ளிட்டவற்றை வழங்குவோம். இனி யாரும் உங்களைத் தாக்க முன்வர மாட்டார்கள்’ எனத் தெரிவித்தார்.