இலங்கையில் குர்ணாகல் பகுதியிலுள்ள மகிந்த ராஜபட்சவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று அதிபா் கோத்தபய ராஜபட்ச, பிரதமா் மகிந்த ராஜபட்ச ஆகியோா் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனா். இதையடுத்து, இரண்டாவது முறையாக அவசரநிலையை கடந்த வெள்ளிக்கிழமை அதிபா் பிரகடனம் செய்தாா்.
இந்த நிலையில் இலங்கையில், மகிந்த ராஜபட்ச பிரதமர் பதவியிலிருந்து இன்று ராஜிநாமா செய்தார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள், இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டு, போராடி வரும் மக்கள் மீது கண்மூடித்தனமான தாக்குதலில் ஈடுபட்டனர். இதனால் இலங்கையில் பல்வேறு இடங்களில் வன்முறை வெடித்துள்ளது.
போராட்டக்காரர்கள் மீது ராஜபட்ச ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியதில் 130க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இலங்கை முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ள நிலையில், குர்ணாகல் பகுதியிலுள்ள மகிந்த ராஜபட்சவின் வீட்டிற்கு போராட்டக்காரர்கள் தீவைத்தனர். உடனடியாக போலீசார், போராட்டக்காரர்களை கண்ணீர் புகை குண்டுகளை வீசி போலீசார் விரட்டியடித்தனர்.
இதேபோல் மெதமுலன பகுதியிலுள்ள ராஜபட்ச குடும்பத்தின் பூர்வீக வீட்டிற்கும் போராட்டக்காரர்கள் தீவைத்தனர்.