உக்ரைனுடனான போரில் 26,350 ரஷிய வீரர்கள் பலியானதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப். 24-ஆம் தேதி போா் தொடுத்தது. இரண்டு மாதங்களைக் கடந்து தொடர்ந்து வரும் போரில் உக்ரைனின் தலைநகா் கீவை ரஷிய படைகளால் கைப்பற்ற முடியாவிட்டாலும், முக்கியத்துவம் வாய்ந்த துறைமுக நகரமான மரியுபோலை முழுமையாக கைப்பற்றியுள்ளன.
குறிப்பாக, ரஷியப் படைகள் கார்கிவ் போன்ற முக்கிய நகரங்களில் கடுமையான தாக்குதல்களையும் நடத்தி வருகின்றன.
இந்நிலையில், உக்ரைனின் தாக்குதலில் ரஷியப் படையினர் 26,350 பேர் பலியானதாகவும் ரஷியாவுக்குச் சொந்தமான 1,187 டாங்கிகள், 2,856 ஆயுதமேந்திய வாகனங்கள், 166 ஹெலிகாப்டர்கள் மற்றும் 199 விமானங்களையும் அழித்துள்ளதாக உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.