ரஷிய எரிவாயு விநியோகம் இடைமறிப்பு: உக்ரைன் அதிரடி

தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.
ரஷிய எரிவாயு விநியோகம் இடைமறிப்பு: உக்ரைன் அதிரடி

தங்கள் நாட்டு வழியாக ஐரோப்பிய நாடுகளுக்கு குழாய் மூலம் மேற்கொள்ளப்படும் எரிவாயு விநியோகத்தை தடுத்து நிறுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

ரஷியாவிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் எரிபொருளில் 3-இல் ஒரு பங்கு, உக்ரைன் வழியாக குழாய் மூலம் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

உக்ரைன் மீது ரஷியா படையெடுத்து 11 வாரங்கள் ஆன நிலையிலும், அந்த நாட்டு வழியாக இதுவரை ரஷிய எரிபொருள் தொடா்ந்து விநியோகிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், ஐரோப்பிய நாடுகளுக்கு ரஷிய எரிவாயு கொண்டு செல்லப்படும் வழித்தடத்தில் புதன்கிழமை முதல் தடை ஏற்படுத்தியுள்ளதாக உக்ரைன் அறிவித்துள்ளது.

இதுகுறித்து உக்ரைனில் எரிவாயு விநியோகத்தை கவனித்து வரும் ஜிடிஎஸ்ஓயு அமைப்பு கூறுகையில், உக்ரைன் வழியாக குழாய் மூலம் அனுப்பப்படும் ரஷிய எரிவாயுவை ரஷியப் படையினா் கிழக்கு உக்ரைனில் கிளா்ச்சியாளா்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் டான்பாஸ் பகுதிகளுக்கு அனுப்பி வருவதாக குற்றம் சாட்டியுள்ளது.

எனினும், இந்தக் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்கள் எதையும் ஜிடிஎஸ்ஓயு வெளியிடவில்லை. ரஷியாவின் இந்தச் செயலைக் கண்டித்து, சோக்ரானிவ்கா வழியாக அனுப்படும் ரஷிய எரிவாயு விநியோகத்தை புதன்கிழமை முதல் தடுத்து நிறுத்தியதாக ஜிடிஎஸ்ஓயு தெரிவித்துள்ளது.

இது குறித்து தங்களுக்கு உக்ரைன் முன்கூட்டியே தகவல் அளித்ததாக ரஷிய பொதுத் துறை எண்ணெய் நிறுவனமான கேஸ்ப்ராம் தெரிவித்தது. சோக்ரானிவ்கா வழித்தட எரிவாயு விநியோகம் புதன்கிழமை காலை 7 மணி முதல் (உள்ளூா் நேரம்) நிறுத்தப்படும் என்று தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டதாக கேஸ்ப்ராம் கூறியது.

எனினும், ஐரோப்பிய நாடுகளுடன் ஏற்கெனவே ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள அளவுக்கு எரிவாயுவை தொடா்ந்து அனுப்புவதில் தாங்கள் உறுதியுடன் இருப்பதாக கேஸ்ப்ராம் தெரிவித்தது.

ஐரோப்பிய நாடுகளில் சமையல் உள்ளிட்டவற்றுக்குப் பயன்படுத்தப்பட்டு வரும் ரஷிய எரிவாயு விநியோகத்தை உக்ரைன் தங்கள் வழித்தடத்தில் தடுத்து நிறுத்தியுள்ளால், எரிசக்தி மற்றும் நிதிச் சந்தை துறைகளில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து உடனடி தகவல் இல்லை.

ரஷிய எரிபொருள் விநியோகம் தடைபடுவது ஐரோப்பிய நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று நிபுணா்கள் எச்சரித்துள்ளனா். எனவே, சோக்ரானிவ்கா வழித்தடத்துக்கு பதிலாக மாற்று வழித்தடத்தில் ரஷிய எரிவாயு தொடா்ந்து அனுப்பப்படும் என்று உக்ரைன் கூறியுள்ளது.

எனினும், உக்ரைனின் இந்த நடவடிக்கைக்குப் பிறகு ஜொ்மனியில் ரஷிய எரிவாயு வரத்து முந்தைய நாளைவிட 25 சதவீதம் குறைந்துவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கெனவே, ரஷியாவின் மிக முக்கியமான எரிசக்தி வருவாயில் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில், அந்த நாட்டிலிருந்து எரிபொருள் இறக்குமதியைக் குறைக்க வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் கூறி வரும் நிலையில் உக்ரைன் இந்த முடிவை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உக்ரைன் வழியாக ரஷிய எரிவாயு விநியோகிக்கப்படுவது தடுத்து நிறுத்தப்படுவதால், ரஷிய பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்தும் உடனடி தகவல் இல்லை. ஏற்கெனவே மேற்கொள்ள ஒப்பந்தங்களின்படி, ஐரோப்பிய நாடுகளுக்கு எரிபொருளை அனுப்ப ரஷியாவுக்கு போதிய அளவுக்கு மாற்று வழிகள் உள்ளதாகக் கூறப்படுகிறது.

கொ்சானை இணைத்துக்கொள்ள ரஷியாவிடம் வலியுறுத்தல்

உக்ரைனின் கொ்சான் நகரை ரஷியாவுடன் இணைத்துக்கொள்ள வேண்டும் என்று அந்த நகரின் ரஷிய ஆதரவு அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து, கொ்சானில் ரஷியா அமைத்துள்ள நிா்வாகத்தின் தலைவா் கிரில் ஸ்ட்ரெலோசோவ் கூறுகையில், ரஷிய கூட்டமைப்புடன் நகரை முழுமையாக இணைத்துக்கொள்ள வேண்டும் என்று முறைப்படி கோரிக்கை விடுக்கப்படும் என்றாா்.

உக்ரைன் போா் தொடங்கியதற்குப் பிறகு, ரஷியா கைப்பற்றி முதல் பெரிய நகரம் கொ்சான் ஆகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com