பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் குரங்கு அம்மை நோயினால் இருவர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மே மாதத்தின் தொடக்கத்திலிருந்தே, வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் 12க்கும் மேற்பட்டோருக்கு குரங்கு அம்மை இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு தற்போது அது சிலருக்கு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மேலும் ஸ்பெயின், போர்ச்சுகல் ஆகிய நாடுகளிலும் இந்த நோயினால் சிலர் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியாகியுள்ளது. கனடாவில் 12க்கும் மேற்பட்டோர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சந்தேகிக்கப்படுகின்றனர்.
இந்நிலையில், அமெரிக்காவில் முதல்முறையாக இந்த நோயால் ஒருவர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகளிலும் இருவருக்கு குரங்கு அம்மை கண்டறியப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால், ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே பரவியிருந்த நோய் தற்போது மற்ற கண்டங்களுக்கும் பரவியுள்ளதா என அச்சம் எழுந்துள்ளது.
இந்த நோயால் பாதிக்கப்படுபவர்கள் பல வாரங்கள் கழித்தே இதிலிருந்து குணமடைகின்றனர். அரிதிலும் அரிதாகவே உயிரிழப்பு நிகழ்கிறது. கடந்த சில ஆண்டுகளில், இந்த நோயால் மத்திய மற்றும் மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இந்த நோய் அரிதான ஒன்றாகவே கருதப்படுகிறது.