ஆப்கானிஸ்தானில் உள்ள விமான நிலையங்களை இயக்குவதற்கு ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த நிறுவனத்துடன் தலிபான்கள் ஒப்பந்தம் செய்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானிலிருந்து நேட்டோ கூட்டுப்படைகள் பின்வாங்கப்பட்டதை தொடர்ந்து கடந்தாண்டு தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர். கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் விமான நிலையங்களை அமெரிக்கா உதவியுடன் இயக்கி வந்தனர்.
தலிபான்கள் அரசு பொறுப்பேற்ற பிறகு விமான நிலையங்களை இயக்குவதற்கு அரபு அமீரகம், துருக்கி, கதார் ஆகிய நாடுகளுடன் கடந்த சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், அமீரகத்தை சேர்ந்த ஜிஏஏசி என்ற நிறுவனத்துடன் விமான நிலையங்களை இயக்குவதற்கு ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு செவ்வாய்க்கிழமை கையெழுத்தானது.
இதையும் படிக்க | மோடி வருகை: சென்னையில் போக்குவரத்து மாற்றம்; கடைகள் மூட உத்தரவு
இந்த நிகழ்வில் பங்கேற்ற துணை பிரதமர் முல்லா அப்துல் கானி, “நாட்டின் பாதுகாப்பு பலமாக உள்ளன. வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் இணைந்து பணிபுரிய ஆப்கன் விரும்புகிறது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், அனைத்து சர்வதேச விமானங்களும் ஆப்கானிஸ்தானில் பாதுகாப்பாக பறக்க முடியும்” என்றார்.
முன்னதாக, கடந்த டிசம்பர் மாதம், காபூல் விமான நிலையத்தை இயக்க துருக்கி மற்றும் கதார் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெடுத்திட்டது. இருப்பினும், ஆப்கனில் நிலவும் பொருளாதார சூழல் காரணமாக பிற மாகாணங்களில் உள்ள விமான நிலையங்களை இயக்குவதில் சிக்கல் நீடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.