பிரபல மென்பொருள் மற்றும் மின்னணு சாதன உற்பத்தி நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள நிறுவன ஊழியர்களுக்கு ஒரே ஆண்டில் இரண்டவது முறையாக ஊதிய உயர்வு அளித்துள்ளது.
கடந்த பிப்ரவரி மாதத்திலும் ஊதிய உயர்வு வழங்கப்பட்ட நிலையில் மணி நேர அடிப்படையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மீண்டும் சம்பள உயர்வை வழங்கியுள்ளது.
அதன்படி ஒரு மணி நேரத்திற்கு ஊதியம் 20 டாலராக இருந்த நிலையில் தற்போது 22 டாலராக(ரூ. 1,700) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 10% மற்றும் அதற்கு அதிகமான ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்களது வேலை சூழ்நிலைகள் குறித்து சில ஊழியர்கள் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த ஊதிய உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
மேலும், 'உலகின் சிறந்த ஊழியர்கள் குழுவை ஆதரித்து தக்கவைத்துக்கொள்வதன் மூலமாக, எங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த, புதுமையான தயாரிப்புகள் மற்றும் சேவைகளை வழங்க முடியும். இந்த ஆண்டு, எங்களின் வருடாந்திர செயல்திறன் மதிப்பாய்வின் ஒரு பகுதியாக, ஒட்டுமொத்த வரவு-செலவுத் திட்டத்தை அதிகரிக்கிறோம்' என்றும் கூறியுள்ளார்.