இந்தியாவின் கோவேக்ஸின் கரோனா தடுப்பூசிக்கு ஜெர்மன் அரசு அனுமதி அளித்துள்ளது.
கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இனி கரோனா பரிசோதனையின்றி ஜெர்மனிக்குள் செல்லலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் கரோனா எனும் பெருந்தொற்றின் அலைகள் இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆனால் தடுப்பூசியால் கரோனா பரவல் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், ஒரு சில நாடுகளில் பரிசோதனை செய்ய வேண்டும் என்ற கரோனா கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன.
இந்நிலையில் இந்தியாவில் பாரத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட கோவேக்ஸின் கரோனா தடுப்பூசியை ஜெர்மன் அங்கீகரித்துள்ளது. கோவேக்ஸின் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் ஜூன் 1 ஆம் தேதி முதல் கரோனா பரிசோதனையின்றி ஜெர்மனிக்கு பயணம் மேற்கொள்ளலாம் என இந்தியாவுக்கான ஜெர்மன் தூதர் வால்டர் ஜெ லின்ட்னர் தகவல் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கோவேக்ஸின் தடுப்பூசி, உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டு பட்டியலில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தற்போது, ஆஸ்திரேலியா, ஜப்பான், கனடா உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட நாடுகள் கோவேக்ஸினை அங்கீகரித்துள்ளன.