நேபாள விமான விபத்தில் பலியான 14 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேபாளத்தில் வெளிநாட்டினா் உள்பட 22 பயணிகளுடன் ஞாயிற்றுக்கிழமை சென்ற சிறிய விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
நேற்று காலை முதலே ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணியில் ராணுவத்தினர் ஈடுபட்டு வந்த நிலையில், விமானம் முஸ்தாங் மாவட்டம் கோவாங் பகுதியில் விழுந்து நொறுங்கியதை உறுதி செய்துள்ளனர்.
விமானம் விழுந்து நொறுங்கிய பகுதியிலிருந்து இதுவரை 14 சடலங்களை மீட்டுள்ள ராணுவத்தினர், உடற்கூராய்வுக்காக காத்மாண்டுவிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.
தொடர்ந்து, மீதமுள்ளவர்களை தேடும் பணியில் ராணுவத்தினருடன் இணைந்து மீட்புப் படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
மீட்புப் பணிகள் குறித்து நேபாளம் ராணுவத்தின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:
14,500 அடி உயரத்தில் விபத்து நடந்துள்ளது. மீதமுள்ள பயணிகளை தேடும் பணிக்காக 15 பேர் கொண்ட ராணுவ குழுக்கள் 11,000 அடியில் இறக்கிவிடப்பட்டுள்ளன.
இந்த விபத்தில் பயணிகள் அனைவருமே உயிரிழந்திருக்கக்கூடும். இருப்பினும், சடலங்கள் கிடைக்கும் வரை அதிகாரப்பூர்வமாக தெரிவிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளார்.