சீனாவின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகள் மற்றும் கரோனாவை முற்றிலும் ஒழிக்கும் திட்டத்திற்கு எதிராக உள்ளூர் நிர்வாகத்தினை எதிர்த்து டியான்ஜின் பல்கலைக் கழக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
டியான்ஜின் பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த மே 26ஆம் தேதி உள்ளூர் நிர்வாகத்திற்கு எதிராக போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தின் போது அதிகாரத்துவம் ஒழிக போன்ற முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சீனா அமல்படுத்தி இருக்கும் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளினால் உணவுப் பொருட்களின் விலை அதிகரித்துள்ளது. மேலும், மாணவர்கள் பல்கலைக் கழக வளாகத்தை விட்டு வெளியே வர முடியாத சூழல் உருவாகியுள்ளது.
மாணவர்களுக்கு பல்கலைக் கழக தேர்வுகள் முன்கூட்டியே நடத்தப்படுவதாகவும், பல்கலைக் கழக அதிகாரிகளுடன் மாணவர்களுக்கு சரியான புரிதல் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் நிர்வாகமும் இந்த விவகாரத்தில் அலட்சியம் காட்டி வருவதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக மே மாதத்தின் இடையில் பெக்கிங் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் சீனாவின் கடுமையான கரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து போராட்டம் நடத்தினர். இந்தக் கடும் கட்டுப்பாட்டினால் மாணவர்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல முடியாமல் சிக்கித் தவிக்கும் நிலை உருவானது.
கடுமையான கரோனா கட்டுப்பாடுகளால் விலைவாசி பெருமளவில் உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.