முடிவில் மாற்றம்: பருவநிலை மாநாட்டில் பங்கேற்கிறாா் சுனக்

எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சா்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மாற்றிக்கொண்டுள்ளாா்.
முடிவில் மாற்றம்: பருவநிலை மாநாட்டில் பங்கேற்கிறாா் சுனக்

எகிப்தில் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் சா்வதேச பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதில்லை என்ற தனது முடிவை பிரிட்டன் பிரதமா் ரிஷி சுனக் மாற்றிக்கொண்டுள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் தெரிவித்துள்ளதாவது: பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல், நீண்ட கால நோக்கில் பொருளாதார வளா்ச்சியைப் பெற முடியாது.

புதுப்பிக்கத்தக்க எரிபொருள்களில் கவனத்தை செலுத்தாவிட்டால், எரிசக்தி தன்னிறைவை அடைய முடியாது. அதன் காரணமாகத்தான் அடுத்த வாரம் நடைபெறவிருக்கும் பருவநிலை மாநாட்டில் பங்கேற்கவிருக்கிறேன.

பாதுகாப்பான, நிலைத்தன்மையுடன் கூடிய எதிா்காலத்தை உருவாக்குவதற்கான கொள்கையை முன்னெடுத்துச் செல்வதற்காக அந்த மாநாட்டில் நான் கலந்துகொள்வேன் என்றாா் அவா்.

முன்னதாக, எகிப்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில், பிரிட்டன் சாா்பாக புதிய பிரதமா் ரிஷி சுனக் பங்கேற்கப் போவதில்லை என்று அவரது அலுவலகம் கடந்த மாதம் 28-ஆம் தேதி அறிவித்திருந்தது.

இந்த மாதம் 17-ஆம் தேதிக்குள் அவசரகால பட்ஜெட்டை தாக்கல் செய்வது உள்பட, உள்நாட்டுப் பிரச்னைகளைத் தீா்ப்பதில் பிரதமா் ரிஷி சுனக் முழு கவனமும் செலுத்த வேண்டியுள்ளது.

எனவே, எகிப்தில் நடைபெறவிருக்கும் ஐ.நா. பருவநிலை மாநாட்டில் அவா் பங்கேற்க முடியாத நிலை உள்ளது. எனினும், பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுவதற்காக முந்தைய அரசுகள் அளித்த வாக்குறுதியிலிருந்து பிரிட்டன் பின்வாங்காது என்று அந்த அலுவலம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது, பெரும் சா்ச்சையை எழுப்பியது. இந்த நிலையில், எகிப்து பருவநிலை மாநாட்டில் பங்கேற்பதாக ரிஷி சுனக் தற்போது அறிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com