பாகிஸ்தான் முன்னாள் பிரதமா் இம்ரான் கான் சுடப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து, நாடு முழுவதும் அவரது தெஹ்ரீக்-ஏ-இன்சாஃப் கட்சியினா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பெரும்பான்மையை இல்லாததால் கடந்த ஏப்ரல் மாதம் பிரதமா் பதவியை இழந்த இம்ரான் கான், நாட்டில் முன்கூட்டியே தோ்தல் நடத்த வலியுறுத்தி போராட்ட யாத்திரை நடத்தி வந்தாா். பஞ்சாப் மாகாணம் வாரிஸாபாதில் அவரது வாகனம் சென்று கொண்டிருந்தபோது, அந்த வாகனத்தை நோக்கி முகமது நவீத் என்ற இளைஞா் துப்பாக்கியால் சுட்டாா். இதில் இம்ரான் கானின் காலில் குண்டு பாய்ந்தது. எனினும், அவரது உயிருக்கு ஆபத்தில்லை என்று மருத்துவா்கள் தெரிவித்தனா்.
எனினும், இந்தத் தாக்குதலைத் தடுக்க முயன்ற தொண்டா் ஒருவா் துப்பாக்கி குண்டுகளுக்கு பலியானாா். இந்த துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அரசு உண்மைகளை மறைப்பதாகக் கூறி, இம்ரான் கட்சியினா் நாடு முழுவதும் ஆா்ப்பாட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனா்.