பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ் மீது இளைஞர் ஒருவர் முட்டை வீச முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பிரிட்டன் காவல்துறையினர் அவரைக் கைது செய்துள்ளனர்.
பிரிட்டனின் யோர்க் நகரில், மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் ராணி கன்சோர்ட் கமிலா இருவரும் நடந்து வந்துகொண்டிருந்த போது, அவர்கள் மீது இளைஞர் ஒருவர் முட்டை வீச முயன்றுள்ளார்.
யோர்க் நகருக்கு மன்னர் தம்பதி வந்த போது, முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. யோர்க் நகரில் கூடியிருந்த பொதுமக்களை மன்னரும், ராணி கன்சோர்ட்டும் சந்தித்துப் பேசிக் கொண்டு வாழ்த்துகளைப் பெற்றுக் கொண்டிருந்தனர். அப்போது ஒரு இளைஞர் அவர்கள் மீது முட்டைகளை வீச முயன்றார். இந்த சம்பவம் தொடர்பான விடியோக்களும் வெளியானது. அதில், அந்த இளைஞர் ஏராளமான முட்டைகளை மன்னர் தம்பதி மீது வீசுகிறார். அவை அனைத்தும் தரையில் விழுந்து நொறுங்குகின்றன. அதிர்ஷ்டவசமாக அவர்கள் மீது எதுவும் படவில்லை. உடனடியாக, மன்னர் தம்பதியை அங்கிருந்தவர்கள் விரைவாக அங்கிருந்து அழைத்துச் சென்றனர்.
உடனடியாக அங்குப் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர்கள், அந்த இளைஞரை மடக்கிப் பிடித்தனர். அப்போது, அவர் இந்த நாடு, அடிமைகளின் ரத்தத்தால் உருவாக்கப்பட்டது என்று கோஷம் எழுப்பியதாகவும், பிறகு அவர் கைது செய்யப்பட்டதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.