ஆயிரக்கணக்கான பல்கேரிய மக்கள் தங்களது ஊதியத்தினை அதிகப்படுத்தக்கோரி வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.
பல்கேரியா ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள மிகவும் ஏழையான நாடாகும். அந்த நாட்டில் கடந்த சில வாரங்களாக விலைவாசி உயர்வினால் மக்கள் பெரும் பிரச்னையை சந்தித்து வருகின்றனர். இந்த சூழலில் பல்கேரியாவின் இரண்டு பெரிய வர்த்தக அமைப்புகள் ஊதிய உயர்வை வலியுறுத்தியை போராட்டத்தைக் கையிலெடுத்துள்ளனர். போராட்டக்காரர்கள் பல்கேரிய நாடாளுமன்ற கட்டடத்துக்கு முன்பாக தங்களது கோரிக்கைகள் அடங்கிய பதாகைகளை கையிலேந்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிக்க: நாயகியாக வென்றாரா சமந்தா? யசோதா - திரை விமர்சனம்
இந்தப் போராட்டத்தில் பங்கேற்ற அவசரப் பிரிவில் பணிபுரியும் மருத்துவர் மரினா யோவ்சேவா கூறியதாவது: நான் என்னுடைய ஊதியம் உயர வேண்டும் என்ற காரணத்துக்காக இந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளேன். எங்களது வேலை மிகவும் கடினமாக இருப்பதன் காரணத்தினாலேயே நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். நான் அவசரப் பிரிவில் மருத்துவராகப் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு தகுந்த ஊதியம் வழங்கப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன் என்றார்.
இது குறித்து பொருளாதார வல்லுநர் ஒருவர் கூறியதாவது: சட்டமியற்றுபவர்கள் நிலையில்லா அரசாக இல்லாமல் அவர்களது கடமையை சரியாக செய்பவர்களாக இருக்க வேண்டும். சட்டமியற்றும் அதிகாரத்தில் உள்ள அவர்கள் அடுத்த ஆண்டு பல்கேரியாவுக்கான சரியான பட்ஜெட்டினை தாக்கல் செய்ய வேண்டும். அந்த புதிய பட்ஜெட்டில் நாட்டில் உள்ள ஊழியர்களுக்கு வழங்கப்படும் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அறிவிக்க வேண்டும் என்றார்.
இதையும் படிக்க: ட்விட்டர் திவாலாகும்: எலான் மஸ்க்
இந்தப் போராட்டத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான கார்கள் பேரணியாக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.