லண்டன்: பிரிட்டன் மன்னர் மூன்றாம் சார்லஸ், இன்று தனது 74வது பிறந்தநாளைக் கொண்டாடும் வேளையில், தனது தந்தை இதுவரை வகித்து வந்த வின்ட்ஸர் பூங்காவின் அதிகாரி பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
பக்கிங்காம் அரண்மனை இது தொடர்பான தகவலை வெளியிட்டுள்ளது. அதில், மறைந்த எடின்பர்க் கோமகன் இளவரசர் ஃபிலிப் பதவி வகித்து வந்த சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வனத்துறை அதிகாரி பொறுப்பை, மன்னர் சார்லஸ் ஏற்றுக் கொண்டுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளது. இந்தப் பதிவுடன், வின்ட்ஸர் பூங்காவில் இருக்கும் ஒரு மிகப் பழமையான மரத்தின் அருகே மன்னர் சார்லஸ் நின்றிருப்பது போன்ற புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளது.
இதையும் படிக்க.. உடற்பயிற்சியின்போது மரணம் நேரிடாமல் தவிர்ப்பது எப்படி?
மன்னர் சார்லஸ், தனது பிறந்தநாளை தனிப்பட்ட முறையில் கொண்டாடி வருகிறார். எந்த அதிகாரப்பூர்வ நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்கவில்லை.
நாட்டின் மிகப் பழமையான தோட்டத்தை பராமரிக்கும் பணிகள் குறித்து துணை அதிகாரி மற்றும் அவரது குழுவினருக்கு அவ்வப்போது வழிகாட்டுதல்களை அளிக்கும் வகையில், சுமார் 70 ஆண்டுகள், பூங்காவின் வனப் பாதுகாப்பு அதிகாரியாக எடின்பர்க் கோமகன் இளவரசர் ஃபிலிப் இந்தப் பதவியை வகித்து வந்தார்.
1559ஆம் ஆண்டு முதல் இப்பதவி இருந்து வருவதாகவும், 460 ஆண்டுகளாக, பிரிட்டன் மன்னர் அல்லது அவரது குடும்ப உறுப்பினர்கள் இந்த பதவியை வகித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.