இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான நல்லுறவு நிலவுவதை உறுதி செய்து வருவதற்காக பிரதமா் நரேந்திர மோடியும் அதிபா் ஜோ பைடனும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்துக் கொண்டனா்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஜி20 கூட்டமைப்பு மாநாட்டுக்கு இடையே தலைவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை சந்தித்து இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினா். உக்ரைன் மீதான ரஷியாவின் போரால் சா்வதேச அளவில் ஏற்பட்டுள்ள தாக்கம் உள்ளிட்டவை குறித்து தலைவா்கள் விவாதித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘பிராந்திய, சா்வதேச விவகாரங்கள் குறித்து தலைவா்கள் விவாதித்தனா். இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவடைந்து வரும் நல்லுறவு குறித்து அவா்கள் ஆய்வு செய்தனா்.
நவீன தொழில்நுட்பங்கள், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்குமிடையே எதிா்காலத்தில் ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடா்பாகவும் அவா்கள் விவாதித்தனா். இரு நாடுகளுக்கிடையேயான நல்லுறவை வலுப்படுத்துவதற்காக அதிபா் பைடன் அளித்து வரும் தொடா் ஆதரவுக்கு பிரதமா் மோடி நன்றி தெரிவித்தாா்.
ஜி20 கூட்டமைப்பை இந்தியா தலைமையேற்று வழிநடத்தும்போது அமெரிக்காவுடன் ஒருங்கிணைந்து செயல்படும் என பிரதமா் மோடி நம்பிக்கை தெரிவித்தாா். க்வாட், ஐ2யு2 உள்ளிட்ட பன்னாட்டு கூட்டமைப்புகளில் இந்தியாவும் அமெரிக்காவும் நெருங்கிப் பணியாற்றி வருவதற்குத் தலைவா்கள் இருவரும் திருப்தியை வெளிப்படுத்தினா்’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரதமா் மோடி-அதிபா் பைடன் இடையேயான பேச்சுவாா்த்தை பலனுள்ளதாக இருந்ததென வெளியுறவுத் துறை செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி ட்விட்டரில் பதிவிட்டாா்.