டிவிட்டர் அலுவலகத்திலேயே வேலையில் இருங்கள் (ஸ்டே அட் வொர்க்) என்ற ஹேஷ்டேக் பதிக்கப்பட்ட டி-ஷர்டுகளை எலான் மஸ்க் இலவசமாகக் கொடுத்து வருகிறார்.
டிவிட்டர் நிறுவனத்திலிருந்து ஊழியர்கள் பணியை ராஜிநாமா செய்துவிட்டு செல்வதைத் தடுக்கும் வகையில், அவர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
உலகம் முழுக்க பல பயனர்களைக் கொண்ட டிவிட்டர் நிறுவனத்தை உலகின் மிகப்பெரிய செல்வந்தரான எலான் மஸ்க் ரூ.3,52,000 கோடிக்கு விலைக்கு வாங்கியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஆள் குறைப்பு, புளூ டிக்கிற்கு பணம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை எலான் மஸ்க் மேற்கொண்டு வருகிறார். இதனால், பலரின் விமர்சனங்களுக்கும் அவர் ஆளாகி வருகிறார்.
டிவிட்டர் நிறுவனத்தின் பணியாளர்களை பாதியாகக் குறைப்பதற்காக மொத்தம் உள்ள 7400 பணியாளர்களில் 3700 பணியாளர்களை பணிநீக்கம் செய்ய எலான் மஸ்க் கடிதம் அனுப்பியுள்ளார்.
இதனிடையே நவம்பர் 16ஆம் தேதி நள்ளிரவில் டிவிட்டர் ஊழியர்களுக்கு எலான் மஸ்க் அனுப்பிய மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றது. இந்த மின்னஞ்சல் ஊழியர்களிடையே அதிருப்தியையே ஏற்படுத்தியது.
இதன் எதிரொலியாக பல டிவிட்டர் ஊழியர்கள், தங்களது ராஜிநாமா முடிவை பகிரங்கமாக அறிவித்துள்ளனர். பலரும் குழு குழுவாக, ராஜிநாமா முடிவை எடுத்திருப்பதாகவும், டிவிட்டர் செயல்பாட்டின் மிக முக்கியமான பொறியாளர் குழுவும் இதில் அடக்கம் எனவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், ஊழியர்கள் பணியிலிருந்து விலகுவதைத் தடுக்கும் வகையில் டிவிட்டர் அலுவலகத்தில் ஊழியர்களுக்கு புதிய டி-ஷர்ட்டை எலான் மஸ்க் அறிமுகம் செய்துள்ளார். கருப்பு நிற டி-ஷர்ட்டில், வேலையில் இருங்கள் (ஸ்டே அட் வொர்க்) என்ற ஹேஷ்டேக் பதிக்கப்பட்டுள்ளது. இதனை தன்னுடைய டிவிட்டர் பக்கத்திலும் பகிர்ந்துள்ளார்.
கடந்த 2016ஆம் ஆண்டு டிவிட்டர் நிறுவனத்தின் துணை நிறுவனர் ஜேக் டோர்சே, ஸ்டே வொர்க் என்ற சாம்பல் நிற டி-ஷர்ட்டுடன் பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.