இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் அதனால் ஏற்பட்ட கடுமையான வெள்ளத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.
ஜூன் மத்தியில் பாகிஸ்தானில் பெய்த கனமழை மற்றும் அதன் தொடர்ச்சியாக அந்நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. ஆனால் அது இரண்டு மடங்காக இருப்பதாக தற்போதைய புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
அந்நாட்டு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலில், பாகிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்தில் அக்டோபர் 2ஆம்ட தேதி வரை 1,700 பேர் பலியாகியுள்ளனர். 12,800 பேர் காயமடைந்துள்ளனர்.
பாகிஸ்தானின் 6 மாகாணங்களில் 5 மாகாணங்களில் உள்ள 81 மாவட்டங்கள், இயற்கை பேரழிவுக்கு உள்ளான பகுதியாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
இப்பகுதிகளில் சுமார் 70 லட்சம் பேர் வீடுகளை இழந்து தெருக்களிலும் மேடான பகுதிகளிலும் குடிசைகள் கூட இல்லாமல் வெட்டவெளியில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சுமார் 5,75,000 பேர் ஒரு வேளை உணவுடன் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சாலைகள், கட்டுமானங்கள், மருத்துவமனைகள் என மிப்பெரிய அளவில் கட்டுமானங்களையும் வெள்ளம் சீரழித்துச் சென்றுள்ளதாகக் கூறப்படுகிறது.