சீனாவில் நிலநடுக்கம்: 65 போ் பலி; 50 ஆயிரம் பேர் வெளியேற்றம்
சீனாவில் திங்கள்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 65 ஆக அதிகரித்துள்ளது. பாதுகாப்புக் கருதி 50 ஆயிரம் பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
நிலநடுக்கம் நேரிட்ட பகுதிகளில் 16 பேரைக் காணவில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பல கட்டடங்கள் சேதமடைந்துள்ளன. பாதுகாப்புக் கருதி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நிலநடுக்கம் கடுமையாக பாதிக்கப்பட்ட பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். பல இடங்களில் மின்சார வசதி துண்டிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து அந்த நாட்டு அரசுக்குச் சொந்தமான ஜின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது:
தென்மேற்கே அமைந்துள்ள சிசுவான்மாகாணத்தில் திங்கள்கிழமை மதியம் 12.25 மணிக்கு (உள்ளூா் நேரம்) நிலநடுக்கம் ஏற்பட்டது. 16 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 6.8 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் மையத்துக்கு 5 கி.மீ. தொலைவில் ஏராளமான கிராமங்கள் இருந்தன. இந்த நிலையில், நிலநடுக்கம் காரணமாக 65 பேர் உயிரிழந்தனா்; சுமாா் 150 போ் காயமடைந்தனா் என்று தெரிவித்துள்ளது.