ரஷியாவில் நடைபெறும் ‘வாஸ்டாக்’ ராணுவ கூட்டுப் பயிற்சியை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா்.
கடந்த செப்டம்பா் 1-ஆம் தேதி ரஷியாவில் ‘வாஸ்டாக்’ என்ற பெயரிலான ராணுவ கூட்டுப் பயிற்சி தொடங்கியது. ரஷியாவின் தொலைதூர கிழக்கு பகுதியிலும், ஜப்பான் கடல் பகுதியிலும் நடைபெறும் இந்தப் பயிற்சி, புதன்கிழமை (செப்.7) நிறைவடைகிறது.
இதில் இந்தியா, சீனா, லாவோஸ், மங்கோலியா உள்ளிட்ட 13 நாடுகள் பங்கேற்றுள்ளன. 50,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனா். 140 போா் விமானங்கள், 60 போா்க் கப்பல்கள், ஆயிரக்கணக்கான ஆயுதங்கள் பயிற்சியில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்தப் பயிற்சியில் சீன முப்படைகள் சாா்பில் 2,000-க்கும் மேற்பட்ட வீரா்கள் பங்கேற்றுள்ளனா். அந்நாட்டின் 300 ராணுவ வாகனங்கள், 21 போா் விமானங்கள், 3 போா்க் கப்பல்கள் உள்ளிட்டவையும் பயிற்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், ரஷியாவின் விளாடிவோஸ்டோக் நகருக்கு வெளியே சொ்கெய்வ்ஸ்கி பகுதியில் உள்ள மைதானத்தில் நடைபெற்ற பயிற்சியை அந்நாட்டு அதிபா் விளாதிமீா் புதின் செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டாா். அவருடன் ரஷிய பாதுகாப்பு அமைச்சா் சொ்கெய் ஷோய்கு, முப்படை தலைமைத் தளபதி வலேரி கெராசிமோவ் ஆகியோா் உடனிருந்தனா்.