அமெரிக்காவில் பீட்சா நிறுவன ஊழியருக்கு வாடிக்கையாளர் ஒருவர் ரூ.2.3 லட்சம் டிப்ஸ் கொடுத்துள்ளார். இதன் புகைப்படங்கள் இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது.
அமெரிக்காவின் பென்ஸில்வேனியா மாகாணத்திற்குட்பட்ட ஸ்க்ரான்டான் நகரில் பீச்டா நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் எரிக் ஸ்மித் என்பவர் உணவருந்த வந்துள்ளார். அவருக்கு மரியானா லம்பார்ட் என்ற உணவக ஊழியர் பீட்சா பரிமாறியுள்ளார்.
உணவு உட்கொண்டதைத் தொடர்ந்து அவருக்கு பில் கொடுக்கப்பட்டது. அதில் பீட்சாவுக்கான கட்டணத்துடன் உணவக ஊழியர் லம்பார்ட்டுக்கு ரூ.2.3 லட்சம் (ரூ.3000 டாலர்) டிப்ஸாக கொடுக்கப்பட்டுள்ளது.
இதனால் நெகிழ்ந்த லம்பார்ட் மிகுந்த மகிழ்ச்சியுடன் டிப்ஸைப் பெற்றுக்கொண்டுள்ளார். அவர் கடன் அட்டை (கிரெடிட் கார்ட்) மூலம் பணத்தை செலுத்தியுள்ளார். இதனால், பீட்சா நிறுவனம் ஊழியருக்கு பணமாக டிப்ஸ் பணத்தை கொடுத்துவிட்டு வங்கிக் கணக்கிலிருந்து மீட்டுக்கொள்ள முடிவு செய்துள்ளது.
இந்நிலையில், மறுநாள் வந்த எரிக் ஸ்மித், டிப்ஸாக வழங்கிய பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். தவறுதலாக பெரிய தொகையை டிப்ஸாக கொடுத்துவிட்டதாகவும், பணத்தை திரும்ப வழங்குமாறும் கோரியுள்ளார். மேலும் தனது கடன் அட்டை நிறுவனத்திடம் டிப்ஸ் பணத்தை பரிமாற்ற வேண்டாம் என நிர்பந்தித்துள்ளார்.
டிப்ஸ் பணத்தை வங்கிக் கணக்கில் பெறமுடியாமல் ஆத்திரமடைந்த பீட்சா நிறுவனம், எரிக் ஸ்மித் மீது வழக்கு தொடர்ந்துள்ளது.