அண்மையில் வெளியிடப்பட்ட நீதி ஆயோக் அறிக்கை, தமிழ்நாட்டில் பத்தாம் வகுப்பிலிருந்து 11-ஆம் வகுப்புக்கு 87 சதவீதம் மாணவர்களே செல்கின்றனர் எனச் சொல்கிறது.
அரசுப் பள்ளிகளில் உணவு வழங்குவதில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னோடி மாநிலமாகத் திகழ்கிறது.
காமராஜர் தொடங்கிய மதிய உணவுத் திட்டம், எம்.ஜி.ஆர். காலத்தில் சத்துணவுத் திட்டமாக விரிவடைந்து, மு.க. ஸ்டாலினின் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் காலை உணவுத் திட்டமாகவும் வளர்ந்துள்ளது.
2001-ஆம் ஆண்டு, தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டத்தை மேற்கோள் காட்டி, இந்தியா முழுவதும் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் வலியுறுத்தியது.
காலை உணவுத் திட்டம் தொடங்கிய பிறகு, பள்ளிக்கு வரும் மாணவர்களின் 10 முதல் 20 சதவீதம் அதிகரித்திருப்பதுடன் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கையும் அதிகரித்துள்ளது.
ஒருவேளையேனும் நல்ல ஊட்டச்சத்துமிக்க உணவை உண்பது என்பது அடிப்படைத் தேவையாக உள்ளது. அது மாணவர்களின் கல்வித் திறனை அதிகரிப்பதுடன், ஆரோக்கியத்தை மேம்படுத்தி, அதன் விளைவாக அவர்கள் விளையாட்டில் பங்கெடுப்பதையும் ஊக்கப்படுத்தும்.
பள்ளியில் தொடர்ந்து இருக்கவும், ஆரோக்கியமாக வளரவும், கற்றலிலும் விளையாட்டிலும் முன்னேறவும் உணவு என்பது ஒரு நலத் திட்டம் மட்டுமல்ல; கல்விக்கான அடிப்படை உள்கட்டமைப்பாகும்.