அன்றும் சரி, இன்றும் சரி தேர்தலில் தோல்வி அடைந்தாலும் மக்களுக்காகக் குரல் கொடுப்பதில் அவர்கள் பின்வாங்கமாட்டார்கள் என்பதுதான் வரலாறு.
தேர்தல் பரப்புரையின்போது தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மீண்டும் 1967 மற்றும் 1977 சாதனை நிகழும் என்று சொன்னார். 1967, 1977 தேர்தல் ஒப்பீடு என்பது ஏற்புடையதல்ல.
புதிய ஆட்சியாளர்கள் மக்களின் தேவை என்ன என்பதைப் புரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டங்களை வகுக்க வேண்டும். அந்தத் திட்டங்களுக்கு முழுச் செயல் வடிவம் கொடுக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் ஆட்சியாளர்களுக்கு உண்டு.
வளர்ந்த நாடுகளில் தேர்தல் என்பதை கால்பந்து போட்டிக்கு ஒப்பிட்டுப் பேசுவார்கள். இந்த முறை நீ வெற்றி பெற்றாய்; அடுத்த முறை நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையுடன்தான் தேர்தல் முடிவுகளை அவர்கள் எடுத்துக் கொள்வார்கள். அதே மனநிலை இங்கிருக்கும் அரசியல் கட்சிகளுக்கும் வர வேண்டும்.
எதிர்க்கட்சி என்பதால் அரசியலுக்காக விமர்சனம் செய்யாமல் ஆளுங்கட்சியின் ஆக்கபூர்வமான திட்டங்களுக்கு ஆதரவும், வரவேற்பும் தரவேண்டும். இதில் யோசிப்பதற்கு ஒன்றும் இல்லை. வளர்ந்த நாடுகளைப்போல் உயர் கல்வியை அனைவருக்கும் தரவேண்டும்.
கட்சிக்காக இல்லாமல் மக்களுக்காக அரசு நடக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், அமைச்சர்கள் அனைவருக்கும் பொதுவானவர்களாக இருக்க வேண்டும்.
அரசு அலுவலகங்களில் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்து பொதுமக்களிடம் எதையும் எதிர்பாராமல் அரசு ஊழியர்கள் தனது கடமையைச் செய்ய வேண்டும். இந்தத் தேர்தலில் பணத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. இன்னும் கொஞ்சம் முன்னேறி பணமே இல்லாத தேர்தல்கள் நடைபெற வேண்டும்.