திருவள்ளூர் மாவட்டத்தில் பயிரிடப்பட்டுள்ள சம்பா நெற்பயிர்களை, குறிப்பாக பிபிடி 5204 ரகத்தை முள் வண்டுகள் தாக்கி அதிக சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன.
முள் வண்டு தாக்குதலைக் கட்டுப்படுத்துவது குறித்து, திரூர் வேளாண் அறிவியல் நிலைய பூச்சியியல் திட்ட ஒருங்கிணைப்பாளர் சுமதி, உதவிப் பேராசிரியர் மணிமாறன் ஆகியோர் கூறியதாவது:
பொதுவாக, முள் வண்டு புழுக்கள் துளைத்திருப்பதை இலைகளின் மேல் தெளிவாகக் காண முடியும். இலைகளின் மேற்புறத்தில் அவை பச்சையத்தைச் சுரண்டி உண்ணுவதால், நடுநரம்புக்கு இணையாக வெள்ளை நிற வரிகள் காணப்படும்.
இலைத் திசுக்களின் ஊடே புழுக்கள் துளைப்பதால், இலை நரம்புகளுக்கு இணையாக ஒழுங்கற்ற கண்ணாடி போன்ற வெள்ளை நிறத் திட்டுக்கள் தோன்றும்.
புழுக்கள் இலைகளைத் துளைத்து, அவற்றின் நுனிகளில் கொப்புளங்களை ஏற்படுத்தும். சேதம் ஏற்பட்ட இலைகள் வாடி விழுந்து விடும்.
தீவிரத் தாக்குதலின்போது, நெல் வயல் முழுவதும் எரிந்தது போன்று காட்சி தரும்.
பூச்சியின் விபரம்: பூச்சியின் முட்டை பொதுவாக இலையின் நுனியை நோக்கி, இளம் இலைகளின் சிறு பிளவு வெடிப்புகளுக்குள் இடப்பட்டிருக்கும்.
புழுக்கள் வெள்ளை கலந்த மஞ்சள் நிறத்தில் தட்டையாகக் காணப்படும். இலைகளைத் துளைத்து இலைத் திசுக்களை உண்டு, அதனுள்ளேயே கூட்டுப் புழுவாக வளரும்.
வண்டுகள் சற்று சதுரமான வடிவத்தில் கருநீலம் (அ) கருப்பு நிறத்தில் உடல் முழுவதும் முட்களுடன் காணப்படும்.
பூச்சிக்கொல்லிகள்: ஹெக்டேர் ஒன்றுக்கு கார்போபியுரான் 15 கிலோ (அ) குளோரோ பைரிபாஸ் 1.25 லிட்டர் (அ) ட்ரைஅசோபாஸ் 1.25 லிட்டர் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தெளிப்பதன் மூலம் முள் வண்டு மேலாண்மையை கடைபிடிக்கலாம்.
மேலும், நெல் வயல்களில் பாசி அதிக அளவில் இருந்தால், பயிர் வளர்ச்சி மிகவும் குன்றி காணப்படும்.
பாசியைக் கட்டுப்படுத்த காப்பர் சல்பேட் ஏக்கருக்கு 1 கிலோ வீதம் இடலாம் என்றார்.