இறவைப் பயிராக உருளைக்கிழங்கு!

திருநெல்வேலி: மலைப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் இறவைப் பயிராக உருளைக்கிழங்கை ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூல், கூடுதல் வருமானம் பெறலாம்
இறவைப் பயிராக உருளைக்கிழங்கு!

திருநெல்வேலி: மலைப் பகுதிகளிலும், சமவெளிப் பகுதிகளிலும் இறவைப் பயிராக உருளைக்கிழங்கை ஜனவரி, பிப்ரவரி மாதத்தில் பயிரிடுவதன் மூலம் நல்ல மகசூல், கூடுதல் வருமானம் பெறலாம் என, தோட்டக்கலைத் துறை அறிவுறுத்தியுள்ளது.
ரகங்கள்: குப்ரி ஜோதி, குப்ரி முத்து, குப்ரி சொர்ணா, குப்ரி தங்கம், குப்ரி மலர், குப்ரி சோகா, குப்ரி கிரிராஜ்.
மண், தட்பவெப்பநிலை: உருளைக்கிழங்கை வளமுள்ள எல்லா மண்ணிலும் பயிரிடலாம். களர் உவர் நிலங்கள் ஏற்றவையல்ல. மிகுதியான நிறமக்கு நிறைந்த இருபொறை நிலங்கள் ஏற்றவை. களிமண் நிலத்தைத் தவிர்க்கவேண்டும். வடிகால் வசதியுள்ள நிலங்கள் ஏற்றவை. குளிர், மித வெப்பப் பகுதிகளில் பயிரிடலாம். மண்ணின் கார அமிலத்தன்மை 4.8 முதல் 5.4 சதம் வரை இருக்கலாம். ஆண்டுக்கு 1,200 முதல் 2,000 மில்லி மீட்டர் வரை மழை பெறும் பகுதிகளில் பயிரிடலாம்.
நடவுப் பருவம்: மலைப் பகுதிகளில் கோடைக்காலமான மார்ச் - ஏப்ரல், இலையுதிர் காலமான ஆகஸ்ட் - செப்டம்பரில் பயிரிடலாம். இறவைப் பயிராக ஜனவரி - பிப்ரவரியில் பயிரிடலாம். சமவெளிப் பகுதிகளுக்கு அக்டோபர் - நவம்பர் உகந்தது.
நிலம் தயாரித்தல்: நிலத்தை நன்றாகக் கொத்தி, பண்படுத்தி 45 செ.மீ. இடைவெளியில் பார் பிடிக்கவேண்டும். மலைப் பகுதிகளில் 1.4 மீட்டர் அளவில் உள்நோக்கி சாய்ந்தவாறு சாய்வுத்தளம் அமைக்கவேண்டும். வடிகாலுக்கு வாய்க்கால்கள் அமைக்க வேண்டும்.
விதைத்தல்: ஹெக்டேருக்கு 3,000 முதல் 3,500 கிலோ கிழங்குகள் வரை தேவைப்படும். உருளைக்கிழங்கு சாகுபடியில் விதைத் தயாரிப்பை முக்கியமாக கவனிக்கவேண்டும். புதிய கிழங்குகள் முளைக்காது, ஆகவே முளைப்புத் தன்மையை ஏற்படுத்த கார்பன் டை சல்பைடை 100 கிலோ கிழங்குக்கு 30 கிராம் என்ற அளவில் பயன்படுத்தவேண்டும். கிழங்குகளை குவியலாக்கி குவியலின் மேல் ஓர் அகன்ற தட்டில் கார்பன் டை சல்பைடை ஊற்றி பாலிதீன் தாளால் மூடவேண்டும். கிழங்குகளில் முளை வந்தவுடன், நடவுக்குப் பயன்படுத்தவேண்டும். நிலத்தின் சாய்தளத்தைப் பொருத்து செடிக்குச் செடி 15-20 செ.மீ. இடைவெளியில் அவற்றை நடவேண்டும்.
நீர் நிர்வாகம்: நடவுக்குப் பின்னர் 10 நாள்களுக்கு ஒருமுறையும், பிறகு வாரம் ஒருமுறையும் நீர்ப்பாய்ச்ச வேண்டும்.
ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து மேலாண்மை: ஒரு ஹெக்டேருக்கு அடியுரமாக 15 டன் மக்கிய தொழு உரம், 2 கிலோ அசோஸ்பைரில்லம் அல்லது பாஸ்போபாக்டீரியம், 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கும் ரசாயன உரங்களை அடியுரமாக இடவேண்டும். இதனுடன் 60 கிலோ மக்னீசியம் சல்பேட்டையும் அடியுரமாக இடவேண்டும். பிறகு விதைத்த 30 நாள் கழித்து 60 கிலோ தழைச்சத்து, 120 கிலோ மணிச்சத்து, 60 கிலோ சாம்பல் சத்து கொடுக்கும் ரசாயன உரங்களை மேலுரமாக இட்டு மண் அணைக்கவேண்டும்
உரப்பாசனம்: உருளைக்கிழங்கில் ஊட்டச்சத்தின் அளவு தழை, மணி, சாம்பல் சத்து முறையே ஹெக்டேருக்கு 120: 240: 120 கி.கி. என்ற அளவில் வழங்க வேண்டும். இதில் 75 கிலோ மணிச்சத்தை சூப்பர் பாஸ்பேட்டாக அடியுரமாக அளிக்க வேண்டும். அளவைப் பிரித்து பயிரின் ஆயுள்காலம் முழுவதும் 3 நாள்களுக்கு ஒருமுறை உரப்பாசனமாக அளிக்க வேண்டும்.
களைக்கட்டுப்பாடு: விதைத்த 60 நாள்களுக்கு களையின்றி பார்ப்பது அவசியம். விதைத்த 45, 60ஆவது நாளில் களையெடுத்து மண் அணைக்கவேண்டும்.
வெட்டுப்புழுக்கள்: இது உருளைக்கிழங்குப் பயிரில் 5 முதல் 10 சதம் வரை சேதமேற்படுத்தும். இப்புழுக்கள் எல்லாப் பருவத்திலும் தோன்றும். இப்புழு கிழங்குகளில் துளையிட்டு மாவுப் பகுதியை உண்கிறது. இதனால் தாக்கப்பட்ட கிழங்கில் பெரிய குழிகள் உண்டாகி, நாளடைவில் கிழங்கு அழுகிவிடும்.
கட்டுப்பாட்டு முறை: தரிசுக் காலங்களில் மண்ணை நன்கு கிளறி, புழுக்களை வெளிக்கொணர்ந்து அழிக்கவேண்டும். தாய்ப்பூச்சிகளை விளக்குப்பொறி வைத்து கவர்ந்தழிக்க வேண்டும். சுழல் தெளிப்புப் பாசனம் உள்ள இடங்களில் தெளிப்பானைக் காலை நேரங்களில் இயங்கச் செய்யவேண்டும்.
நீரின் வேகத்தால் புழுக்கள் மண்ணிலிருந்து வெளிக்கொணரப்பட்டு பறவைகளுக்கு இரையாகிவிடும்.
குளோரிபைரிபாஸ் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கலந்து செடிகளின் தண்டுப்பகுதியில் ஊற்றவேண்டும்.
நூற்புழுக்கள்: உருளைக்கிழங்கில் நூற்புழுவின் தாக்குதலைத் தவிர்க்க உருளைக்கிழங்கு இனத்தைச் சாராத பயிர் வகைகளான கோதுமை, மக்காச்சோளம், பீன்ஸ் போன்றவற்றைப் பயிரிடவேண்டும். அல்லது காய்கறிப் பயிர்களான முட்டைக்கோஸ், பூக்கோஸ், கேரட், முள்ளங்கி, அவரை வகைகளைப் பயிரிட்டு பயிர்ச் சுழற்சி செய்யவேண்டும். விதைக்கிழங்கை விதைக்கும் முன்பு கார்போபியூரான் கரைசலில் நனைக்கவேண்டும்.
விதைக்கிழங்குகளை விதைக்கும் முன்பு சுத்தப்படுத்த வேண்டும். நூற்புழுக்கள் நிறைந்த மண்ணிலுள்ள விதைக்கிழங்குகளை விதைக்காகப் பயன்படுத்தக்கூடாது. நூற்புழுக்களுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட ரகங்களான குப்ரி சொர்ணா போன்ற ரகங்களைப் பயிரிடவேண்டும்.
இலைச்சுருள் நோய்: இந்நோயால் பாதித்த செடிகளின் அடிப்பகுதியில் உள்ள இலைகள் மேல்நோக்கிச் சுருண்டுவிடும். அத்தகைய செடிகள் வளர்ச்சி குன்றி வெளிர் நிறமாகத் தோன்றும்.
இந்த வைரஸும் அசுவினி மூலம் பரவுகிறது.
வைரஸ் நோய்களைக் கட்டுப்படுத்த வைரஸ் தாக்காத செடிகளிலிருந்து கிழங்கு எடுத்து நடவேண்டும்.
தேவையறிந்து பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தெளித்து அசுவினியைக் கட்டுப்படுத்துவதன் மூலமும் இந்நோயைத் தவிர்க்கலாம்.
அறுவடை: கிழங்குகள் நன்கு முற்றி தடித்திருக்கும்போது தோண்டியெடுத்தால் சேதம் குறையும்.
பின்பு கிழங்குகளை ராசி, பெரிய பொடி, வந்தபொடி, தள்ளு என்னும் 4 விதமாக தரம் பிரித்து விற்பனைக்கு அனுப்பவேண்டும்.
மகசூல்: ஹெக்டேருக்கு 120 நாளில் 15 முதல் 20 டன் கிழங்குகள் மகசூலாக கிடைக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com