கஜா புயல் எச்சரிக்கை காரணமாக, காரைக்கால், மயிலாடுதுறை தடத்திலான விரைவு ரயில்கள் மற்றும் பயணிகள் ரயில்களின் போக்குவரத்து நவ. 15, 16 ஆகிய தேதிகளில் முழுமையாகவும், பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
கஜா புயல் வியாழக்கிழமை பிற்பகல் கடலூர் - பாம்பன் இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக, பலத்த காற்று வீசக் கூடும் எனவும், கனமழைக்கு வாய்ப்புள்ளது எனவும் அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நவ. 15-ஆம் தேதி முழுமையாக ரத்து செய்யப்படும் ரயில் சேவைகள் : காரைக்கால் - சென்னை விரைவு ரயில், வேளாங்கண்ணி - சென்னை (இணைப்பு) விரைவு ரயில், மன்னார்குடி - சென்னை விரைவு ரயில், வேளாங்கண்ணி - காரைக்கால் பயணிகள் ரயில், காரைக்கால் - தஞ்சாவூர் பயணிகள் ரயில், விழுப்புரம் - மயிலாடுதுறை - விழுப்புரம் பயணிகள் ரயில்கள் வியாழக்கிழமை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேலும், எர்ணாகுளம்- காரைக்கால் விரைவு ரயில் நாகையுடனும், திருச்சிராப்பள்ளி - காரைக்கால் பயணிகள் ரயில் திருவாரூருடனும், கே.எஸ்.ஆர். பெங்களூரு- காரைக்கால் பயணிகள் ரயில் மயிலாடுதுறையுடனும் நிறுத்தப்படுகின்றன.
நவ. 16-ஆம் தேதி பகுதியளவில் நிறுத்தப்படும் ரயில் சேவைகள்: காரைக்கால் - திருச்சி பயணிகள் ரயில் திருவாரூருடன் நிறுத்தப்படுகிறது. காரைக்கால் - கே.எஸ்.ஆர். பெங்களூரு பயணிகள் ரயில் மயிலாடுதுறையிலிருந்து இயக்கப்படும் எனவும் தெற்கு ரயில்வே திருச்சி கோட்ட அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.