ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு உள்ளதா என்பது குறித்து கோவையைச் சேர்ந்த இருவரிடம் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை விசாரணை நடத்தினர்.
இந்தியாவில் ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்புக்கு ஆதரவாக செயல்படுவதாகக் கூறி சிலரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்துள்ளனர்.
மேலும் அந்த அமைப்புக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் சிலர் கருத்துகளை பதிவிட்டு வருவது குறித்து தேசிய புலனாய்வு அமைப்பினர் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் ஐஎஸ்ஐஎஸ்அமைப்புக்கு ஆதரவாக கோவை, தெற்கு உக்கடம் மற்றும் கரும்புக்கடையைச் சேர்ந்த 2 இளைஞர்கள் முகநூலில் கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது. இதனடிப்படையில் கொச்சியில் உள்ள தெற்கு பிராந்திய தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வியாழக்கிழமை கோவை வந்தனர். பின்னர் அவர்கள், அந்த இளைஞர்களின் வீடு மற்றும் அவர்களுக்கு சொந்தமான கடைகளில் சோதனை நடத்தினர். கொச்சியில் ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த 8 பேரை தேசிய புலனாய்வு முகமையினர் 2016-ஆம் ஆண்டு கைது செய்தனர்.
கைதானவர்களில் சென்னை, கோவை, நெல்லை பகுதிகளைச் சேர்ந்த மூவர் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த வழக்கில் ஆதாரம் திரட்டவே தேசிய புலனாய்வு அமைப்பினர் கோவையில் இருவரிடம் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.
மேலும் அவர்கள் இருவரையும் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.