விவசாயக் குழுக்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும் என ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலாநாயர் கூறினார்.
தருமபுரி மாவட்டம், கெüரிசெட்டிப்பட்டியில், மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தி நிறுவனத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில், சிறுதானிய மதிப்புக் கூட்டும் இயந்திரங்களின் தொகுப்பை தொடங்கிவைத்து அவர் பேசியது: விவசாயக் குழுக்களில் பெண்கள் அதிகளவில் ஈடுபட வேண்டும். பெண்கள் சுகாதாரம், ஊட்டச் சத்து உள்ளிட்டவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டும். மகளிர் சுயஉதவிக் குழுக்கள் சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
முன்னோடியாக செயல்படும் விவசாயிகளை வைத்துதான் திட்டக்குழு பல்வேறு திட்டங்களை மற்ற இடங்களில் தொடங்க நடவடிக்கை எடுக்கும். விவசாயிகளின் வெற்றிதான் அதிகாரிகளுக்கு நம்பிக்கையை கொடுக்கிறது. விவசாயிகள் உற்பத்திப் பொருள்களை இடைத்தரகர்கள் இன்றி, நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்யவேண்டும். அதே போல, உற்பத்தியாளர்களே நுகர்வோர்களாக செயல்பட வேண்டும்.
சிறுதானிங்களை மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக மாற்றி விற்பனை செய்யும்போது, இந்த நிறுவனம் பெரும் வளர்ச்சி அடையும். சிறுதானிய உற்பத்தியில் தருமபுரி மாவட்டம் முதலிடத்தில் உள்ளது. இதன் காரணமாக, கடந்த காலங்களில் திட்டக்குழு மூலம் நிதி உதவிகளை தருமபுரி மாவட்ட சிறுதானிய உழவர் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கியது. அனைத்து விவசாயிகளின் கூட்டு முயற்சியால் இந்த நிறுவனம் வளர்ச்சியை எட்டி மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கவேண்டும் என்றார்.
மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன், வேளாண் திட்ட ஒருங்கிணைப்பாளர் இளங்கோ, மாநில திட்டக் குழுவின் விவசாயக் கொள்கை மற்றும் திட்டமிடல் குழுமத் தலைவர் ஜெகன்மோகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








