விழுப்புரத்தில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது கல்வீச்சு
விழுப்புரத்தில் புதன்கிழமை ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாஜக தேசியச் செயலர் ஹெச்.ராஜா சுட்டுரையில் பதிவிட்ட சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து, விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு கட்சிகள், திராவிட அமைப்புகள் சார்பில் புதன்கிழமை போராட்டங்கள் நடைபெற்றன.
இதையொட்டி, மாவட்டத்தில் உள்ள பாஜக,
ஆர்.எஸ்.எஸ். அலுவலகங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், விழுப்புரம் சாமுண்டீஸ்வரி நகர், வால்மீகி தெருவில் சமர்ப்பணம் சேவை மையம் என்ற பெயரில் "மாதவம்' என்ற கட்டடத்தில் செயல்படும் ஆர்.எஸ்.எஸ். அலுவலகம் மீது மாலை 4.30 மணியளவில் இரு சக்கர வாகனத்தில் வந்த இரு மர்ம நபர்கள், கற்களை வீசித் தாக்கினர்.
இதில், அலுவலகத்தின் வெளியே இருந்த மின் விளக்கு உடைந்தது.
தகவல் அறிந்து விழுப்புரம் நகர போலீஸார் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர். மேலும், அங்கு பதிவாகியிருந்த கண்காணிப்புக் கேமரா காட்சிகளை கைப்பற்றி, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.