இருசக்கர வாகன விற்பனை நடப்பு 2016-17 நிதி ஆண்டில் 7 முதல் 8 சதவீதம் அளவுக்கே வளர்ச்சி காணும் என நிதி ஆய்வு நிறுவனமான ஐ.சி.ஆர்.ஏ. தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அக்டோபர் மாதம் வரையில் இரட்டை இலக்க வளர்ச்சி கண்டு வந்த இருசக்கர வாகனங்கள் விற்பனை ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் புழக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை அடுத்து சோர்வடைந்தது.
கரன்ஸி வாபஸ் நடவடிக்கைக்கு பிறகு உள்நாட்டில் பணப்புழக்கத்துக்கு அதிக தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால், 2016 நவம்பர் மற்றும் 2017 ஜனவரி மாதங்களுக்கு இடைப்பட்ட காலத்தில் மட்டும் இருசக்கர வாகன விற்பனை 11.3 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சியடைந்தது.
இந்த நிலையில், பி.எஸ்.-4 விதிமுறைகள் ஏப்ரல் முதல் நடைமுறைக்கு வரவிருப்பதும் வாகன விற்பனையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு நிதி ஆண்டின் முதல் 10 மாதங்களில் மோட்டார் வாகனத் துறையின் ஒட்டுமொத்த விற்பனை 8.3 சதவீத வளர்ச்சியைக் கண்டது. கடந்த நான்கு நிதி ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது இந்த வளர்ச்சி சிறப்பானதாகவே உள்ளது.
உயர் மதிப்பு கரன்ஸி வாபஸ் பிரச்னையால் உருவான தாக்கத்திலிருந்து ஜனவரியில் மோட்டார் வாகனத் துறை சிறிதளவு மீண்டுள்ளது. இருப்பினும், நடப்பு நிதி ஆண்டில் இருசக்கர வாகனத் துறையின் வளர்ச்சி விகிதம் 7-8 சதவீதமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளர்கள் பலர் வாகனங்களை வாங்கும் திட்டத்தை ஒத்திவைத்துள்ளதால் வரும் நிதி ஆண்டின் 3 மற்றும் 4-ஆம் காலாண்டுகளில் வாகன விற்பனை விறுவிறுப்படையும் எனத் தெரிகிறது.
வழக்கம் போலவே வரும் நிதி ஆண்டிலும் மோட்டார் சைக்கிள் விற்பனையைக் காட்டிலும் ஸ்கூட்டர்கள் விற்பனையே விஞ்சி நிற்கும்.
வாகன ஏற்றுமதியைப் பொருத்தவரையில், ஆப்பிரிக்கா, தெற்காசியா மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வர்த்தக வாய்ப்புகள் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு வாகன ஏற்றுமதி வளர்ச்சி விகிதம் 8-10 சதவீதமாக இருக்கும். முக்கிய ஏற்றுமதி நாடுகளின் சந்தைகள் மந்த நிலையிலிருந்து மீண்டு வருவதையடுத்து, அடுத்த நிதி ஆண்டின் இரண்டாவது அரையாண்டிலிருந்து வாகனங்கள் ஏற்றுமதி படிப்படியாக அதிகரிக்கும் என ஐ.சி.ஆர்.ஏ. அந்த ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.