கர்நாடகாவில் பற்றி எரியும் பாகுபலி 2 சர்ச்சை!

ஏப்ரல் 28 அன்று கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்கிற ரகசியம் இந்தியா முழுக்க அறியப்பட்டுவிடும். கர்நாடகாவைத் தவிர.
கர்நாடகாவில் பற்றி எரியும் பாகுபலி 2 சர்ச்சை!

ஏப்ரல் 28 அன்று கட்டப்பா ஏன் பாகுபலியைக் கொன்றார் என்கிற ரகசியம் இந்தியா முழுக்க அறியப்பட்டுவிடும். கர்நாடகாவைத் தவிர. 

பாகுபலி 2 படம் எப்போது வெளிவரும் என்று சினிமா ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்துக்கொண்டிருக்க கர்நாடகாவில் மட்டும் இன்னமும் அந்தப் படத்தின் விநியோக உரிமையை வாங்க ஆளில்லாத நிலையே உள்ளது. 

ஒரே காரணம் - சத்யராஜ்!

பிரபாஸ், ராணா டகுபதி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன் போன்றோர் நடிப்பில் தெலுங்கு, தமிழ், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவான படம் - பாகுபலி. இதனை இயக்கியவர், ராஜமெளலி. ரூ. 600 கோடி வரை வசூலித்து பல சாதனைகளைச் செய்த பாகுபலியின் 2-ம் பாகமான, 'பாகுபலி தி கன்க்ளூஷன்’ படம் ஏப்ரல் 28 அன்று பாகுபலி 2 வெளிவருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, காவிரி நீர் பிரச்னை தமிழக கர்நாடக மாநிலங்களில் வெடித்துக்கிளம்பியபோது கர்நாடகத்துக்கு எதிராக சத்யராஜ் பேசியுள்ளார். இதுதான் இப்போது பெரிய சிக்கல் ஆகியிருக்கிறது. கர்நாடகத்துக்கும் கன்னடர்களுக்கும் எதிராக பேசிய சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே அவர் நடித்துள்ள பாகுபலி 2 படம் கர்நாடகாவில் வெளியாகும் என்று கன்னட அமைப்புகள் மல்லுக்கட்டுகின்றன. பிரச்னை பெரிதாக உள்ளதால் பாகுபலி 2 படத்தின் கர்நாடக உரிமையை வாங்கத் தயங்கி கடைசியில் இதுவரை அது விற்கப்படாமல் உள்ளது.  

கன்னட சலுவளிக் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகள் கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் இந்த விவகாரம் பற்றிக் கூறும்போது: படத்துக்கு நாங்கள் எதிரி அல்ல. ஆனால் கட்டப்பாவாக நடித்துள்ள சத்யராஜை நாங்கள் எதிர்க்கிறோம். காவிரி விவகாரத்தின்போது கர்நாடாகாவையும் கன்னட மக்களையும் அவர் மோசமாகப் பேசினார். நாங்களும் தமிழ்நாடுக்கு எதிராகப் போராட்டங்கள் நடத்தினோம். ஆனால் தமிழர்களுக்கு எதிராகப் பேசவில்லை. எனவே சத்யராஜ் தன்னுடைய பேச்சுக்காக மன்னிப்பு கேட்கவேண்டும். இல்லாவிட்டால் என் தலைமையில் உள்ள 2000 அமைப்புகளும் பாகுபலி 2 படம் கர்நாடகாவில் திரையிடப்பட்டால் தடுத்து நிறுத்துவோம் என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் படம் வெளியாகும் நாளன்று பெங்களூரில் பந்த் நடத்தவும் அழைப்பு விடுத்துள்ளார். அன்று பெங்களூரில் ஒரு பேரணி நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.  

கடந்த வாரம் இந்தியா முழுக்க 1000 திரையரங்குகளில் பாகுபலி 1 படம் மீண்டும் வெளியானது. ஆனால் அது கர்நாடகாவில் மட்டும் வெளியாகவில்லை. காரணம் அதே சத்யராஜ் எதிர்ப்பு.

இந்த விஷயத்தில் வெற்றியை ருசித்த கன்னட அமைப்புகள் இதே தீவிரத்தை ஏப்ரல் 28 அன்றும் நிலைநாட்டவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார்கள். கர்நாடகா ஃபிலிம் சேம்பரின் தலைவர் கோவிந்து கூறும்போது: பாகுபலி படக்குழுவினர் எங்கள் அமைப்பிடம் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. சத்யராஜ் மன்னிப்பு கேட்டால் மட்டுமே பாகுபலி 2 கர்நாடகாவில் வெளியாகும். அவர் கன்னடர்களை அவமதித்துள்ளார் என்றார். 

கன்னடத் திரைப்பட தயாரிப்பாளர் ஒரு பேட்டியில் கூறியதாவது: ஆர்எஸ் புரொடக்‌ஷன்ஸ், பாகுபலி 1 படத்தை ரூ. 18 கோடி வாங்கி வெளியிட்டார்கள். ஆனால் பாகுபலி 2 படத்துக்கு ரூ. 40 கோடி கேட்கிறார்கள். இப்படம் குறித்த இத்தகைய சர்ச்சைகள் நிலவும்போது யார் அவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வார்கள் என்றார்.

இந்த விவகாரம் குறித்து சத்யராஜ் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. 

சத்யராஜுக்கும் கன்னட அமைப்புகளுக்கும் இடையே சமரசம் ஏற்பட்டால்தான் பாகுபலி 2 கர்நாடகாவில் வெளியாகும். இல்லாவிட்டால் விஸ்வரூபம் படத்தை மாநிலம் தாண்டி தமிழ் ரசிகர்கள் பார்த்ததுபோல கர்நாடகாவின் பாகுபலி ரசிகர்களும் அண்டை மாநிலங்களுக்குச் சென்று பாகுபலி 2 படத்தைப் பார்க்க நேரிடும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com