சிம்புவால் படுபாதாளத்துக்குச் சென்றுள்ளேன்: அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைக் கூறும் அஅஅ படத்தயாரிப்பாளர்!

எந்தக் கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்கத் தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தந்துவிட்டார்...
சிம்புவால் படுபாதாளத்துக்குச் சென்றுள்ளேன்: அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகளைக் கூறும் அஅஅ படத்தயாரிப்பாளர்!

சிம்புவாலும் அவர் நடித்த அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தினாலும் நான் படுபாதளத்துக்குச் சென்றுவிட்டேன் என்று அப்படத்தின் தயாரிப்பாளர் மைக்கேல் ராயப்பன் பரபரப்பான குற்றச்சாட்டுகளைக் கூறியுள்ளார். 

ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் சிம்பு நடிப்பில் கடந்த ஜூன் மாதம் வெளியான படம் - அன்பானவன் அசராதவன் அடங்காதவன். யுவன் இசையமைத்த இப்படத்தில் ஸ்ரேயா, தமன்னா, சனாகான் போன்றோர் நடித்தார்கள். சிம்பு 3 விதமான கெட்டப்களில் நடித்தார். இப்படத்தின் தயாரிப்பாளர் - மைக்கேல் ராயப்பன்.

இந்நிலையில் சிம்பு குறித்து மைக்கேல் ராயப்பன் ஓர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். அதில் சிம்பு மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுக்கியுள்ளார். அந்த அறிக்கையில்
கூறப்பட்டதாவது:

கடந்த 9 வருடங்களில் 12 படங்களைத் தயாரித்துள்ளேன். பல படங்கள் சுமாராக ஓடினாலும் எப்படியும் வெற்றி அடைந்தே தீருவேன் என்கிற வெறியில் படத்தயாரிப்பைத் தொடர்ந்தேன்.

ஆனால் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படம், சிம்பு அவர்களால் என்னைப் படுபாதாளத்துக்குக் கொண்டு செல்லும் என்று நான் கனவிலும் நினைக்கவில்லை. இந்தப் படம் தொடர்பான பலதரப்பட்ட யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அதன் உண்மை நிலையை உங்களுக்குத் தெரிவிக்கக் கடமைப்பட்டுள்ளேன்.

ஏப்ரல் 9, 2016-ல் அலுவலகத்தில் பூஜை. மே மாத இறுதியில் படப்பிடிப்பைத் தொடங்கத் திட்டம். எந்தக் கதாநாயகியும் சிம்புவுடன் நடிக்கத் தயாராக இல்லை. த்ரிஷா நடிக்க வாங்கிய அட்வான்ஸ் தொகையையும் திருப்பித் தந்துவிட்டார். லட்சுமி மேனனை கொச்சியில் சந்தித்தும் மறுத்துவிட்டார். கடைசியில் ஸ்ரேயா ஒப்புக்கொண்டார். 

படப்பிடிப்பு ஏற்பாடு செய்யும்போது ஒவ்வொரு லொகேஷனையும் மாற்றினார் சிம்பு. ஜூலை மாதம் திண்டுக்கல்லில் படப்பிடிப்பு ஆரம்பமானது. படப்பிடிப்புத் தேதியை அவரே தேர்வு செய்வார். அவரே கால்ஷீட் நேரத்தையும் தேர்வு செய்வார். ஆனால் அவர் சொன்ன கால்ஷீட் நேரத்தில் ஒருநாளும் வந்தது இல்லை. வரவும் மாட்டார். கபாலி படம் பார்க்க ஒருநாள் படப்பிடிப்பை நிறுத்தினார். 

முதல் ஷெட்யூல் முடிந்தபிறகு, ஸ்ரேயா சரியில்லை. அவரை நீக்கிவிட்டு திரும்பவும் படப்பிடிப்பு நடத்தலாம் என்றார். அதனால் அவருடன் இருந்த பாடலை கடைசிவரை எடுக்கமுடியவில்லை. 

பலவழிகளில் தொல்லை கொடுத்தார். பலநாள்கள் அவரால் படப்பிடிப்பு நின்றது. எப்படியாவது படப்பிடிப்பைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருக்கவேண்டும் என்பது அவர் எண்ணம். 

மாயாஜாலில் படப்பிடிப்பு நடந்தது ஈசிஆர்-ல் அறை எடுத்துத் தங்கினார். அதன் கணக்கு விவரங்களை சுப்பு (இராம நாராயணன்) கேட்டார் என்ற ஒரே காரணத்துக்காக அவரைப் படத்திலிருந்து நீக்கினால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என்று அடம்பிடித்தார். அவர் மாற்றப்பட்டார். 

இவரால் தமன்னா, கோவை சரளா, மொட்டை ராஜேந்திரன், ஏன் 80 வயது நீலு வரை பாதிக்கப்பட்டவர்களே அதிகம். 

மூன்றாவது கதாபாத்திரத்தில் நடிக்க சிம்பு விரும்பவில்லை. ஒருவழியாக இயக்குநர் கதறி அழுது ஒரு மணி நேரம் தாருங்கள் என்று கேட்ட பின்னர் என் வீட்டிலேயே எடுத்துக்கொள்ளுங்கள் என்றார். 

டப்பிங்குக்கு வெளிவர மாட்டேன் என்றார். வெளியீட்டுத் தேதி நெருங்கியதால் வீட்டிலேயே (பாத்ரூம்) டப்பிங் பேசினார். அதை எடுத்துக்கொண்டு 4 ஃபிரேம்ஸ் ராஜாகிருஷ்ணனிடம் காண்பித்தால், இவ்வளவு மோசமான குரல் பதிவை என்னால் மிஸ் செய்யமுடியாது என்றார். வேறு இடம் பார்த்துக்கொள்ளுங்கள் என்றார். 5 நாள்களில் தணிக்கைக்கு அனுப்பவேண்டும் என்பதால் வாய்ஸ் மாடுலேஷன் சாஃப்ட்வேர் வாங்கிக்கொடுத்து ஓரளவு சரி செய்தோம். 

சிம்புவினால் ஏற்பட்ட இடைஞ்சல், தொல்லைகள் ஆகியவற்றால் படம் குளறுபடியாக வந்தது. 

படப்பிடிப்புக்குத் திட்டமிடப்பட்டது - 75 நாள்கள்
படப்பிடிப்பு நடந்தது - 47 + 1
சிம்பு வந்த நாள்கள் - 38
பாடல் + சண்டை - 13
வசனக் காட்சிகளுக்கு சிம்பு வந்தது - 25

எனக்கு ஏற்பட்ட கதி வேறு எந்தத் தயாரிப்பாளருக்கும் மீண்டும் ஏற்படாமல் காக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com