மொழியின்றி மனிதரில்லை

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகத்தில் இருக்கும் ஈழாயிரம் மொழிகளில் தொண்ணூறு சதவீத மொழிகள் இல்லாமல் போய்விடும் என்று சமூக, மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள்.
சா. கந்தசாமி
சா. கந்தசாமி

இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் உலகத்தில் இருக்கும் ஈழாயிரம் மொழிகளில் தொண்ணூறு சதவீத மொழிகள் இல்லாமல் போய்விடும் என்று சமூக, மொழியியல் ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். அதுவும் மலை, வனப் பகுதிகளில் வாழும் பழங்குடி மக்களின் எழுத்து இல்லாதப் பேச்சு மொழிகள் வேகமாக அழிந்துவிடுமாம்.
மனித கண்டுபிடிப்புகளிலேயே மகத்தான கண்டுபிடிப்பு மொழிதான். அது மனிதனின் முதல் கண்டுபிடிப்பு இல்லையென்றாலும், முதல் இடத்தில் இருக்கிறது. பல தலைமுறைகளின் எண்ணங்கள், தத்துவங்கள், கலை இலக்கியங்கள் எல்லாம் அடுத்தத் தலைமுறைக்கு மொழி வழியாகவே வருகின்றன. எழுதப்பட்டால் நிலைத்து நின்று விடுகிறது. எனவேதான் பேசும் மொழியும், எழுதும் எழுத்தும் பெரும் செல்வங்கள்.
தன் மூதாதையர்களில் இருந்து பெற்ற அரிய செல்வத்தைப் பேணி பாதுகாத்து அடுத்தத் தலைமுறையினரிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டியது ஒவ்வொரு தலைமுறையினரின் கடமை. தாய்மொழி பேசிய கடைசி தலைமுறையாக நாம் இருந்துவிடக் கூடாது. அது பலரும் பேசும் மொழியாக இருக்க வேண்டும் என்பதை எடுத்துச் சொல்லவே உலகம் முழுவதிலும் உலகத் தாய்மொழி தினம் ஐ.நா. சபையின் கலாசார நிறுவனமாகிய யுனெஸ்கோ வேண்டுகோள்படி கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்தியா நெடுங்காலமாகவே பன்மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் வாழும் நாடு. அது பன்முறை கலாசாரத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அது இந்தியாவின் வலிமை. 1962-ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1562 தாய்மொழிகளும் அவற்றின் கிளைமொழிகளும் பேசும் நாடாக இருக்கிறது என்பது தெரிந்தது.
பெரும்பான்மையான மக்கள் பேசும், எழுதும் தாய்மொழிதான் பெரிய மொழி என்பதோ, குறை எண்ணிக்கையிலான மக்கள் பேசும் - எழுதப்படாத மொழி சிறியது என்பதோ கிடையாது. மொழியென்ற அளவில் எல்லாம் ஒன்றுதான். பேச்சு என்பதே வாயொலிதான். அது சொல்; வார்த்தை என்று கட்டமைக்கப்பட்டு இருக்கிறது.
1956-ஆம் ஆண்டில் இந்தியா மொழிவழி மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டது. மொழிவழி மாநிலம் என்றால், எந்த மொழியை அதிகமான மக்கள் தாய்மொழியாகக் கொண்டு பேசி வருகிறார்களோ - அது அந்த மொழி மாநிலமாக்கப்பட்டது. பழங்குடி மக்கள் வாழும் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றுக்கு மேற்பட்ட மொழிகளைத் தாய்மொழியாக இருந்ததால் சில மொழிகள் மாநில மொழிகளாக்கப்பட்டன.
இந்தியாவின் பெரும் பரப்பில் இந்தி மொழி பேசப்பட்டு வந்ததால், கலாசார அடிப்படையில் பல மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. ஆனால் இந்திதான் மாநில மொழி. அதோடு இந்தியாவின் ஒரே ஆட்சிமொழியாகவும், தேவநாகரி எழுத்துகளில் எழுதப்படும் இந்தி மொழி இருக்கிறது.
வங்காள மொழி, வங்காளம், திரிபுரா மாநிலங்களில் அதிகமான மக்களின் தாய்மொழி. எனவே இரண்டு மாநிலங்களிலும் வங்காள மொழி ஆட்சிமொழியாக இருக்கிறது. இந்தியாவின் தேசிய கீதம் வங்காள மொழியில்தான் இருக்கிறது.
தெலுங்கு மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால் தெலுங்கு என்ற ஒற்றை மொழிதான் இரண்டு மாநிலங்களின் ஆட்சி மொழி.
இந்தியாவில் எந்ததொரு மாநிலமும் ஒரே தாய்மொழியைப் பேசும் மக்களைக் கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பிற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்கள் பல்லாண்டுகளாக வாழ்ந்து வருகிறார்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியில் பேசவும், எழுதவும் உரிமை பெற்றவர்கள். அவர்களின் மொழியைப் படிக்கப் பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள் ஏற்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை.
பன்மொழி கலாசாரமே இந்தியா. வேறுபட்ட தாய்மொழிகளை இந்தியர்கள் பேசிக் கொண்டும் எழுதிக் கொண்டும் ஒன்றாக வாழ்ந்து வருகிறார்கள்.
2500 ஆண்டுகளுக்கு முன்னால் மகத நாட்டில் பிறந்து வளர்ந்தவர் கெளதம சித்தார்த்தர். அவர் தாய்மொழி மகாதி. எழுத்துகள் இல்லாத மொழி. அவர் ஞானம் பெற்று புத்தராகிய பின்னரும் தாய்மொழியான மகாதியில் தர்ம உபதேசங்கள் புரிந்து வந்தார். அதோடு பிட்சுக்களுக்கு, எங்கு சென்றாலும் - அப்பகுதி மக்களின் தாய்மொழியிலேயே உபதேசங்கள் இருக்கட்டும் என்று அறிவுரை வழங்கினார்.
உலகத்திலேயே தாய்மொழிக்காக முதலில் குரல் கொடுத்தவர் புத்தர்தான். அவர் காலத்தில் அதிகமான மக்கள் பேசும் மொழியாக பாலி இருந்தது. சமஸ்கிருதம் கற்றவர்களின் மொழியாக பாலி இருந்தது. ஆனால் புத்தர் பரி நிர்வாணம் அடையும் வரையில் தன் தாய்மொழியான மகாதியில்தான் பேசி வந்தார்.
பல நூற்றாண்டுகளாகவே இந்தியாவில் இரண்டு பெரிய மொழிகள் இருந்து வருகின்றன. ஒன்று சமஸ்கிருதம். அது யார்க்கும் தாய்மொழி இல்லை. ஆனால் பல இந்திய மொழிகளுக்கு அதுதான் தாய். சமஸ்கிருதம் இந்திய மொழிதான் என்றாலும், அது இந்தோ - ஐரோப்பிய குடும்பத்து மொழி. இலக்கணம், வேதம், தத்துவம், காவியம், புராணம், நாடகம் என பலவும் கொண்ட மொழி.
இந்தியாவின் இன்னொரு பெரிய மொழி தமிழ். அது மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேலாகப் பேச்சு மொழியாகவும், எழுத்து மொழியாகவும் இருந்து வருகிறது. தமிழ் திராவிட குடும்பத்து மொழி. 200 மில்லியன் மக்கள் திராவிட குடும்பத்து மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்டிருக்கிறார்கள்.
தமிழ்மொழி, தமிழ்நாடு மாநிலத்தின் ஆட்சிமொழி. சிங்கப்பூரின் ஆட்சிமொழிகளில் ஒன்று. இலங்கை, மலேசியாவில் அங்கீகாரம் பெற்ற மொழி. இங்கிலாந்து, அமெரிக்கா, கனடா, நார்வே, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், ஜெர்மனி, மொரீஷஸ், தென்னாப்பிரிக்கா - என்று பல நாடுகளிலும் பேசப்படும் மொழியாக இருக்கிறது.
புலம் பெயர்ந்த இந்தியத் தமிழர்களும், இலங்கைத் தமிழர்களும் தங்களின் தாய்மொழியான தமிழ்மொழியை சர்வதேச மொழியாக்கி விட்டார்கள். அவர்கள் மொழியையே அடையாளமாக இருக்கிறது. பத்திரிகைகள், இசை நிகழ்ச்சிகள், கருத்தரங்கள், மாநாடுகள் நடத்துகிறார்கள். சினிமாவை எடுத்துக் கொண்டு போய்க் காட்டுகிறார்கள்.
அதிகாரம், ஆட்சி வன்முறை என்பதற்கு எதிராக மொழியை ஒரு கருவியாக - கருத்தைச் சொல்லும் ஆயுதமாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள். 8-ஆவது நூற்றாண்டில் வாழ்ந்த கம்பர் என்னும் மகாகவி, "மன்னவனும் நீயோ, வளநாடும் உன்னதோ' என்று கேட்டுவிட்டுத் தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டது நவீன காலத்தில் அரசுகளை எதிர்த்துப் போராட உத்வேகம் அளித்திருக்கிறது. அது தாய்மொழி படிப்பின் வழியாக வந்தது.
அது தொடரும் மரபாகவே இருந்து வருகிறது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் சுதந்திரம் வேண்டி நடைபெற்றப் போராட்டத்திற்குத் தாய்மொழிகளே காரணமாக இருந்தது. அரசை மிகவும் தீவிரமாக எதிர்த்து எழுதினார்கள். அதனால் தேச துரோகக் குற்றம்சாட்டப்பட்டு சிலர் தூக்கில் போடப்பட்டார்கள். சிலர் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
நாடு கடத்தப்பட்டவர்களும், தன்னைத்தானே நாடு கடத்திக் கொண்டவர்களும் இருக்கிறார்கள். அதெல்லாம் நடந்து முடிந்துபோன சரித்திரம்.
இன்றைய பிரச்னை பேச்சும் எழுத்தும் கொண்டிருக்கும் தாய்மொழிகளை அழிவின் விளிம்பில் இருந்து எப்படி காப்பாற்றுவது என்பதுதான். பல ஜனநாயக நாடுகளில் - பன்மொழிகள் பேசப்படும் நாடுகளில் அரசியல் கட்சிகளாலும், ஆட்சிபுரிவோராலும் தாய்மொழிக்கு பெரும் நெருக்கடிகள் ஏற்பட்டு இருக்கின்றன.
மக்களின் வாக்குகளைப் பெற தந்திரமாக பெரும்பான்மையான மக்கள் தாய்மொழிதான் ஆட்சி மொழி. அரசு ஆதரவு என்பது அவர்களின் மொழிக்குத்தான். ஒரு நாடு, ஒரு மொழி, ஒரு கலாசாரம் என்பதுதான் வளர்ச்சிப் பாதைக்கு இட்டுச் செல்லும். எனவே பெரும்பான்மையான மக்களின் முன்னேற்றம் என்பதற்கு வாக்குக் கேட்கிறார்கள். வெற்றி பெற்றதும் அம்மொழியை சிறுபான்மையினர் மேல் திணிக்கிறார்கள்.
சிறுபான்மையான மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கிளர்ச்சி செய்கிறார்கள். போராட்டங்கள் நடத்துகிறார்கள். அது உலகம் முழுவதிலும் பல நாடுகளிலும் நடைபெற்று இருக்கிறது.
தாய்மொழிக்காகவே கிளர்ச்சி செய்து, ஒரு நாடு உருவானது என்றால் அது வங்க தேசம். அது கிழக்கு பாகிஸ்தான் என்ற பெயரில் இருந்தது. மக்களில் பெரும்பான்மையானவர்கள் சமயத்தால் இஸ்லாமியர்கள். அவர்கள் தாய்மொழி வங்காளம். ஆனால், பாகிஸ்தான் ஆட்சிமொழி என்று உருது அறிவித்துக் கொண்டது. எனவே வங்க மொழிக்கு இடம் இல்லாமல் போய்விட்டது.
1952, பிப்ரவரி 21-ஆம் தேதி கிழக்குப் பாகிஸ்தானில் தாய்மொழிக்கான பெரும் போராட்டம் தொடங்கியது. ஆயிரக்கணக்கானவர்கள் போராட்டத்தில் பங்கு பெற்றார்கள். அதில் மாணவர்கள் முன்னிலையில் இருந்தார்கள். டாக்கா பல்கலைக்கழகத்தின் முன்னே கூடியிருந்த பெரும் திரளான மக்கள் மீது போலீஸ் சுட்டது. நான்கு மாணவர்கள் இறந்தனர்.
ஆனாலும் தாய்மொழிக்கான போராட்டம் நீர்த்துப் போகவில்லை. அது அரசியல் போராட்டமாக மாறியது. முப்பதாண்டுகள் கிளர்ச்சிகள், போராட்டங்கள் நடத்தி ராணுவ பலம் கொண்ட பாகிஸ்தானை வென்று தனி நாடாகியது.
அதுதான் வங்கதேசம். மொழியின் உரிமைக்காகவே போராடி பெற்றது. வங்கதேசத்தில் அது தாய்மொழி திருவிழா.
தாய்மொழியை எல்லோரும் பேச வேண்டும். படிக்க வேண்டும். அதில் பெருமை கொள்ள வேண்டும் என்பதை உலக மக்கள் அனைவருக்கும் சொல்ல ஐ.நா. சர்வதேச தாய்மொழி தினத்தைக் கொண்டாடி வருகிறது. அது தாய்மொழியை பாதுகாக்கும் நடவடிக்கைதான்.

(இன்று உலகத் தாய்மொழி நாள்)

கட்டுரையாளர்:
எழுத்தாளர்.
சா. கந்தசாமி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com