மோடி அரசா இப்படி...?

பொதுவாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்ட பிறகு அதில் மாற்றங்கள் செய்வதும், திருத்தங்கள் கொண்டு வருவதும் வழக்கமில்லை.

பொதுவாக நிதிநிலை அறிக்கைத் தாக்கல் செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்ட பிறகு அதில் மாற்றங்கள் செய்வதும், திருத்தங்கள் கொண்டு வருவதும் வழக்கமில்லை. அதேபோல, நிதி மசோதாக்களில் திருத்தம் கொண்டு வரவோ, மாற்றங்கள் செய்யவோ மாநிலங்களவைக்கு அதிகாரம் இல்லை என்றாலும்கூட, மாநிலங்களவையிலும் முழுமையாக விவாதிக்கப்பட்ட பிறகுதான் நிதிநிலை அறிக்கைகள் நிறைவேற்றப்படும்.
இதுவரை இல்லாத ஒரு புதிய நடைமுறையை 2017-18 நிதிநிலை அறிக்கையை நிறைவேற்றும்போது நரேந்திர மோடி அரசு கடைப்பிடித்திருக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கை, சென்ற மாதம் 22-ஆம் தேதி நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்டபோது, அதில் ஒன்று இரண்டல்ல, 40 திருத்தங்களைக் கொண்டு வந்திருந்தது அரசு. அதுகுறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படவில்லை.
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கையில் இப்படி புதிதாக 40 திருத்தங்கள் நுழைக்கப்படுவது என்பதும், அவை எந்தவித விவாதமும் இல்லாமல் நிறைவேற்றப்படுவது
என்பதும், நிதித்துறை சாராத திருத்தங்களும் சட்டங்களும் நிதி மசோதாவில் இணைக்கப்பட்டு நிறைவேற்றப்படுவது என்பதும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பலவீனப்படுத்தும் என்பது மட்டுமல்ல, சர்வாதிகாரப் போக்குக்கும் வழிகோலும். எல்லா விவாதங்களும் முடிந்த பிறகு தந்திரமாக கடைசி நேரத்தில் பல திருத்தங்களையும் மாற்றங்களையும் நுழைத்து மசோதாவை நிறைவேற்றிக் கொள்வது என்பது அரசியல் ரீதியாக வேண்டுமானால் வெற்றியாக இருக்கலாம், ஆனால் அது நரேந்திர மோடி அரசுக்குப் பெருமை சேர்க்காது.
கடைசி நிமிடத் திருத்தங்களில் ஒன்று, வருமான வரி அதிகாரிகளுக்கு வானளாவிய அதிகாரத்தை வாரி வழங்கி இருக்கிறது. அவர்கள் இனிமேல், யாரையும், யாருடைய இடத்தையும் சந்தேகத்திற்கு இடமிருக்கிறது என்கிற ஒரே காரணத்துக்காக சோதனையிடவும், சொத்துகளையும் ஆவணங்களையும் பறிமுதல் செய்யவும் முடியும். சோதனையிட்டதற்கான காரணத்தை மேல்முறையீட்டுத் தீர்ப்பாயம் உள்பட யாருக்கும் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்தத் திருத்தம், நிதியமைச்சக, வருமான வரி அலுவலர்கள் வரம்பில்லாமல் முறைகேடுகளில் ஈடுபட வழிவகுக்கப் போவதுடன் எதிர்க்கட்சியினரையும், அரசுக்கு வேண்டாதவர்களையும் பழிவாங்கவும் பயன்படுத்தப்படலாம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது.
இன்னொரு திருத்தம், மேல்முறையீட்டுத் தீர்ப்பாயங்களைக் கலைத்து விடவும், இரண்டு மூன்று தீர்ப்பாயங்களை இணைக்கவும், மாற்றியமைக்கவும் வழிகோலுகிறது. தீர்ப்பாயங்கள் நாடாளுமன்றத்தால் சட்டம் இயற்றப்பட்டு, இயங்குபவை. அவை உச்சநீதிமன்றம் முன்பு கையாண்ட செயல்பாடுகளை செய்கின்ற அதிகாரம் படைத்தவை. இனிமேல் இவை மத்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் இருக்கும். தன்னிச்சையாக இயங்கும் சக்தியை இவை இழக்கும்.
நிதிநிலை அறிக்கையில் கொண்டு வரப்பட்டிருக்கும் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு மாற்றம், அரசியல் கட்சிகளுக்கு கார்ப்பரேட் நிறுவனங்கள் அளிக்கும் நன்கொடைகள் தொடர்பானது. இதுவரை, எந்தவொரு நிறுவனமும் மூன்று ஆண்டுகளின் நிகர சராசரி லாபத்தில் 7.5 விழுக்காடு மட்டும்தான் அரசியல் கட்சிகளுக்கு
நன்கொடையாக வழங்க முடியும். அவர்கள் தங்களது வரவு செலவுக் கணக்கில் நன்கொடை வழங்கிய தொகை குறித்தும், அது எந்தக் கட்சிக்கு வழங்கப்பட்டது என்பது குறித்தும் குறிப்பிட்டாக வேண்டும்.
இப்போது இந்த 7.5 விழுக்காடு வரம்பு விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. ஒரு நிறுவனம் லாபம் சம்பாதித்தாலும், நஷ்டத்தில் இயங்கினாலும் எவ்வளவு வேண்டுமானாலும் அரசியல் நன்கொடையை வழங்கலாம். அவர்கள் எவ்வளவு நன்கொடை வழங்கினார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டுமே தவிர, எந்தக் கட்சிக்கு வழங்கினார்கள் என்பது குறித்து வெளியிட வேண்டியதில்லை. போலி நிறுவனங்களின் பேரில் அரசியல் கட்சிகள்- முக்கியமாக ஆளும் கட்சிகள்- நன்கொடை பெற்றுக் கொள்ளலாம் என்றால், ஆட்சியாளர்களின் லஞ்சப் பணம் போலி நிறுவனங்களின் பெயரில் கட்சி நன்கொடையாகி விடும்.
அதுமட்டுமல்ல, உரிமம் வழக்குவதற்கும், அரசின் உதவி பெறுவதற்கும் நிறுவனங்கள் ஆளும் கட்சிக்கு நன்கொடை வழங்க வற்புறுத்தப்பட மாட்டார்கள் என்பது என்ன நிச்சயம்? அரசாங்கத்தின் அனுமதி பெறவும், வங்கிகளில் வாங்கிய கடனைத் தள்ளுபடி செய்யவும் இனிமேல் கையூட்டுப் பெற மாட்டார்கள். துணிசலாகக் கட்சிக்கு நன்கொடை பெறுவார்கள். அதனால்தான், இந்தியாவில் தொழில் அமைப்புகளும் கார்ப்பரேட் நிறுவனங்களும் இதுகுறித்து மெளனம் காக்கின்றன.
நிதி மசோதாவாக இருந்தால், மாநிலங்களவையில் ஒப்புதல் தேவையில்லை என்பதுதான், பல நிதித்துறை சாராத திருத்தங்களை நிதி மசோதாவில் நுழைத்திருப்பது கண்டனத்துக்குரியது. மாநிலங்களவையைத் தவிர்க்க வேண்டும் என்கிற அரசின் முனைப்பு, வருங்காலத்தில் மிகப்பெரிய தவறுகளுக்கு வழிகோலப்போகிறது.
ஜனநாயகத்தின் மீது இதுவரை இல்லாத மிகப் பெரிய தாக்குதல் நடந்திருக்கிறது. நாமெல்லாம், என்ன நடக்கிறது என்பதுகூடத் தெரியாமல் இருக்கிறோம். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களே கவலைப்படவில்லை எனும்போது, பாவம் பொதுஜனம் என்னதான் செய்துவிட முடியும்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com