
காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தாற்காலிக நிவாரணமாக விநாடிக்கு 2,000 கன அடி நீரைத் திறந்துவிட வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவை செயல்படுத்துவதில் சிக்கல் உள்ளது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் கர்நாடக அரசு புதன்கிழமை இடைக்கால மனு தாக்கல் செய்துள்ளது.
அந்த மனுவில் இடம் பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு: கடந்த 11-ஆம் தேதி நிலவரப்படி, கர்நாடக அணைகளில் 15.92 டிஎம்சி அளவு நீர் உள்ளது. இந்த நீரைக் கொண்டு கர்நாடகத்தின் நீர்த் தேவையை பூர்த்தி செய்யவே இயலவில்லை. காவிரி நீர் இருப்பு தொடர்பாக ஆய்வு செய்த மத்திய அரசு நியமித்த உயர் தொழில்நுட்பக் குழு கூட அடுத்த ஆண்டு மே மாதம் வரை கர்நாடகத்தின் நீர்த் தேவைக்கு 17.25 டிஎம்சி நீர் தேவை என்று மதிப்பிட்டுள்ளது.
இத்தகைய சூழலில் மறுஉத்தரவு பிறப்பிக்கும் வரை தமிழகத்துக்கு விநாடிக்கு 2,000 கன அடி நீரை திறந்துவிட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவை நடைமுறையில் செயல்படுத்துவது இயலாத காரியமாகும். இதனால், கர்நாடகத்தில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பல்வேறு விளைவுகளை மாநிலம் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இந்த அம்சங்களை கவனத்தில் கொண்டு, காவிரி விவகாரம் தொடர்பான அடுத்த விசாரணையின் போது, உரிய உத்தரவை உச்ச நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டும் என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.