கடல் பகுதியைக் கண்காணிப்பதற்காக கார்டியன் ரகத்தைச் சேர்ந்த 22 ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா விரைவில் விற்பனை செய்ய உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் "ஜெனரல் அடோமிக்ஸ்' நிறுவனத்திடம் இருந்து கார்டியன் ரக 22 ஆளில்லா விமானங்களை வாங்க விரும்புவதாக அந்நாட்டு அரசின் பாதுகாப்புத் துறைக்கு கடந்த பிப்ரவரி மாதம் இந்தியக் கடற்படை கடிதம் எழுதியிருந்தது. அந்தக் கடிதத்துக்கு இதுவரை எந்தவொரு முடிவையும் அமெரிக்க அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கவில்லை. இத்தகைய சூழலில், பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஜூன் மாதம் அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது, "தங்கள் நாட்டின் முக்கிய ராணுவக் கூட்டாளி இந்தியா' என்று அமெரிக்க அதிபர் ஒபாமா அறிவித்தார். இந்நிலையில், அமெரிக்காவுக்கு கடந்த மாதம் 29-ஆம் தேதி பாதுகாப்புத் துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர் சென்றபோது, கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை வாங்குவது குறித்து அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆஷ்டன் கார்ட்டருடன் விவாதித்ததாகத் தெரிகிறது. அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் முடிவடைவதற்குள், கார்டியன் ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவுக்கு விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படலாம் என்றும் இதன்மூலம், இருதரப்பு ராணுவ உறவு மேலும் மேம்படும் என்றும் அந்நாட்டு பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.