பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இன்று இணைப்பு

பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5
பாரத ஸ்டேட் வங்கியுடன் 5 வங்கிகள் இன்று இணைப்பு

மும்பை: பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகளான ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், திருவாங்கூர், ஹைதராபாத், ஜெய்ப்பூர், பட்டியாலா ஆகிய 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இன்று முதல் இணைக்கப்பட்டுள்ளன.

பாரத ஸ்டேட் வங்கி (SBI) இந்தியாவின் மிகப் பெரும் அரசு வங்கியாகும். இதனைத் தமிழில் இந்திய இந்திய அரசு வங்கி என அழைக்கப்படுகிறது.  ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி செயல்படுகிறது. இந்திய அரசால் நடத்தப்படுவதுடன் அரசின் வரவு செலவுக் கணக்குகளும் இவ்வங்கியில் நடைபெறும். ஆயினும் பொது மக்கள் இவ்வங்கியினை மற்ற வங்கிகளைப் போலவே பயன்படுத்தி வருகின்றனர்.  ஒவ்வொரு மாநிலத்திலும் இவ்வங்கியின் கிளைகள் உள்ளன. இந்தியாவின் எல்லா மாநிலங்களிலும் இவ்வங்கிகள் பணியாற்றுவதால் ஸ்டேட் வங்கி எனப்பட்டது. இவ்வங்கியினை அந்தந்த மாநில அரசுகள் நிர்வகிப்பதில்லை. மத்திய அரசின் ரிசர்வ் வங்கியே நிர்வகிக்கிறது. ஆயினும் அந்தந்த மாநில அரசுகளின் வரவு செலவுகள் இந்த வங்கியின் மூலம் நடைபெறுகின்றன.

இந்த வங்கி இந்தியத் துணைக்கண்டத்திலேயே பழமைவாய்ந்த வங்கியாகும். 1806ஆம் ஆண்டு கல்கத்தா வங்கி என துவங்கியது பாரத இம்பீரியல் வங்கியாக உருவெடுத்து. பின்னர் பாரத ஸ்டேட் வங்கியானது. 1955-ஆம் ஆண்டு இந்திய அரசு பாரத இம்பீரியல் வங்கியை நாட்டுடமையாக்கியபோது பாரத ரிசர்வ் வங்கி 60 சதவீத முதலீடு செய்து பாரத ஸ்டேட் வங்கி என பெயரிடப்பட்டது. 2008-ஆம் ஆண்டு பாரத ரிசர்வ் வங்கியின் பங்குகளை இந்திய அரசே வாங்கியது. அதன் மூலம் ரிசர்வ் வங்கியின் முகமை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி அரசு வங்கியானது.

ஸ்டேட் வங்கி இந்தியா மற்றும் வெளிநாடுகளில் பரந்துள்ள தன் கிளைகள் மூலம் பல்வகை வங்கிச்சேவைகளையும் அளித்து வருகிறது. 16000 கிளைகள் கொண்டுள்ள ஸ்டேட் வங்கிக் குழுமம் இந்தியாவிலேயே கூடுதலான கிளைகள் கொண்டுள்ள வங்கியாகும். நாட்டில் வங்கிகள் மூலம் கொடுக்கப்பட்டுள்ள கடன்களில் 20 சதவீதம் இந்த வங்கியினுடையதாகும்.

மிகப்பழைமையான வங்கியாகவும் மிகப்பெரிய வங்கியாகவும் இருந்தபோதும் தனது செயல்பாடுகளை கணிணிமயமாக்குவதிலும் புதிய சேவைகளை வழங்குவதிலும் முன்னணியில் இருந்து வருகிறது. தனது கூடுதல் ஊழியர் எண்ணிக்கையைக் குறைக்க தங்க கைகுலுக்கல் திட்டத்தை நிறைவேற்றிய நேரத்தில் பல திறமை வாய்ந்த மேலாளர்களை புதியதாக வந்த வங்கிகள் இழந்தது.

உலக அளவில் இது 29 ஆம் இடத்தில் உள்ளதாக ஃபோர்பசு தரவரிசை அறிக்கை கூறுகிறது.

இந்தியாவின் நான்கு பெரிய வங்கிகளில் இது ஒன்றே அரசு வங்கி. மற்றவை ஐசிஐசிஐ வங்கி, ஆக்சிஸ் வங்கி, எச்டிஎஃப்சி வங்கி முதலியனவாம்.

ஸ்டேட் வங்கியின் கட்டுப்பாட்டில் ஆறு இணைவங்கிகள் செயல்படுகின்றன; இவையனைத்தும் சேர்ந்து ஸ்டேட்வங்கி குழுமம். இவை அனைத்துமே ஒரே சின்னமாக நீலநிற சாவித்துளையை கொண்டுள்ளன. அக்டோபர் 1959 மற்றும் மே 1960 ஆண்டுகளில் ஏழு வங்கிகள்  நாட்டுடைமை ஆக்கப்பட்டப்போது இவை பாரத ஸ்டேட் வங்கியின் இணை வங்கிகளாயின. முதல் ஐந்தாண்டுத் திட்டக் காலத்தில் கிராம வளர்ச்சிக்காக கிராமங்களில் வங்கி பரவலை கூட்ட இவ்வாறு செய்யப்பட்டது.

மாறிவரும் பொருளியல் மாற்றங்களுக்கொப்ப இந்த இணைவங்கிகளை முதன்மைவங்கியடன் இணைத்து மிகப்பெரும் வங்கியை உருவாக்கிட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி ஆகஸ்ட் 13,2008 அன்று சௌராஷ்டிர ஸ்டேட் வங்கி பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்தது.

ஜூன் 19,2009 அன்று ஸ்டேட் வங்கியின் ஆட்சிக்குழு இந்தூர் ஸ்டேட் வங்கியை தன்னுடன் இணைத்திட ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்த வங்கியில் பாரத ஸ்டேட் வங்கிக்கு 98.3 சதவீத பங்கும் பிறருக்கு 1.77 சதவீத பங்கும் உள்ளது. இவர்கள் இந்த வங்கி அரசுடைமையாவதற்கு முன்னமே இந்தப் பங்குகளுக்கு உரிமையாளர்களாக இருந்தனர். இந்த இணைப்பின் பிறகு பாரத ஸ்டேட் வங்கியின் 11,448 கிளைகளுடன் 470 கிளைகள் கூடுதலாகும். இவற்றின் ஒட்டு மொத்த சொத்து மதிப்பு மார்ச் 2009 கணக்கின்படி ரூ. 998,119 கோடிகளாகும்.

2014 மார்ச் 31 அன்றைய நிலவரப்படி 222,033 ஊழியர்களைக் கொண்டுள்ள பாரத ஸ்டேட் வங்கி, இந்தியாவில் அதிக ஊழியர்களைக் கொண்டு செயல்படும் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த ஊழியர்களில் 45,132 பெண் ஊழியர்களும் (20 சதவீதம்) மற்றும் மாற்றுத்திறனாளிகள் 2,610 (1 சதவீதம்) ஊழியர்களும் பணியாற்றுகின்றனர். அதே தேதியில், இவ்வங்கி 42.744 அட்டவணை வகுப்பினர் (19 சதவீதம்) மற்றும் 17.243 அட்டவணை பழங்குடியினர் (8 சதவீதம்) பணியாளர்களையும் கொண்டிருந்தது. மற்றும் அதே நாளில் இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களில் அலுவலர்கள், உதவியாளர்கள் மற்றும் இதர ஊழியர்களின் விழுக்காடுகள் முறையே 36 சதவீதம், 46 சதவீதம், 18 சதவீதங்களாக இருந்தன. கிராமப்புற மற்றும் நகர்ப்புற கிளைகளில் உள்ள ஊழியர் பற்றாக்குறையை சரிசெய்யவும், தனது நிறுவனத்தின் கிளைகளை அதிகரிக்கவும் 2013 - 2014 நிதியாண்டில் 1,776 உதவியாளர்கள் மற்றும் 1,394 அதிகாரிகளை புதிதாக பணியமர்த்திக் கொண்டது. 2013-14 நிதியாண்டின் ஆண்டு அறிக்கையின்படி, இந்நிறுவனத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பணியாளரும் இந்நிறுவனத்திற்கு ரூபாய் 4.85 லட்சம் நிகர லாபமாக ஈட்டித் தந்துள்ளனர்.


பாரத ஸ்டேட் வங்கியின் துணை வங்கிகள் விரைவில் ரிசர்வ் வங்கியிடம் இணைப்பு நடவடிக்கைக்கு துணை வங்கி களின் பங்குதாரர்கள் இசைவு தெரிவித்திருந்தன.

வங்கி இணைப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக பங்குதாரர்களின் ஆட்சேபனைகள் மற்றும் குறைகளைக் கேட்பதற்கு அமைக்கப்பட்ட வல்லுநர்கள் குழுவின் ஆலோசனைகளை இயக்குநர்கள் குழு பரிசீலித்தது. இதன் ஒரு பகுதியாக குறைதீர்ப்பு முறைகள் ஏற்படுத்தப்பட்டு ஸ்டேட் பேங்க் ஆப் பிகானீர் அண்ட் ஜெய்ப்பூர் வங்கி அனுப்பியுள்ள அறிக்கையில் எந்த மாற்றங்களும் இல்லாமல் கையகப்படுத்த இந்த வங்கியின் இயக்குநர் குழு ஒப்புதல் அளித்தது. வங்கியின் வல்லுநர்கள் குழு இந்த இணைப்பு குறித்து அளித்துள்ள அறிக்கையை ரிசர்வ் வங்கியின் அனுமதிக்கு அனுப்பியது. இது தொடர்பாக இதர துணை வங்கிகளான ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர், ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் வங்கிகளும் அறிவிப்புகளை வெளியிட்டு இருந்தன.

இதையடுத்து இந்த ஆண்டு தொடக்கத்தில் எஸ்பிஐ வங்கி அதன் ஐந்து துணை வங்கிகளை இணைத்துக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது.

இந்நிலையில், பிகானீர் மற்றும் ஜெய்ப்பூர் ஸ்டேட் வங்கி,  ஹைதராபாத் ஸ்டேட் வங்கி, மைசூர் ஸ்டேட் வங்கி, பாட்டியாலா ஸ்டேட் வங்கி, திருவாங்கூர் ஸ்டேட் வங்கிகள் என 5 வங்கிகளும் பாரத ஸ்டேட் வங்கியுடன் இன்று முதல் இணைக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் குமுளியில் உள்ள திருவாங்கூர் வங்கியின் முகப்பு பலகைகள் பாரத ஸ்டேட் வங்கி என மாற்றப்பட்டுள்ளது.

72 ஆண்டுகளாக இயங்கி வந்த ஸ்டேட் பேங்க் ஆஃப் திருவாங்கூர் இனி இதே பெயரில் தொடராது என எண்ணி மனம் வேதனையடைவதாக அதில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்தனர்

இதன் மூலம் எஸ்பிஐ வங்கியின் மொத்த சொத்து மதிப்பு 36 சதவீதம் உயர்ந்து ரூ.30 லட்சம் கோடியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com