திருப்பதி: நான் எந்தவொரு கட்சியையும் சேர்ந்தவன் அல்ல. இன்று முதல் எனக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது என்று துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடு கூறியுள்ளார்.
கடந்த வாரம் நடைபெற்ற துணை குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கய்ய நாயுடு, இன்று திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.
பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் ரேணிகுண்டாவுக்கு சென்ற வெங்கய்ய நாயுடு, அங்கிருந்து சாலைமார்கமாக திருப்பதிக்குச் சென்றார்.
திருமலையில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சிறப்பு பூஜையில் பங்கேற்ற வெங்கய்ய நாயுடு, ஏழுமலையானை தரிசனம் செய்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய வெங்கய்ய நாயுடு, நான் நான் பாஜகவை சேர்ந்தவன் அல்ல. எந்த கட்சியையும் சாராதவன். இன்று முதல் எனக்கான புதிய அத்தியாயம் தொடங்குகிறது.
துணை குடியரசுத் தலைவர் பொறுப்புக்கு ஏற்றவாறு, அரசியல் சாசனத்துக்குட்பட்டு செயல்படுவேன் என்றார்.