பிகாரில் வெள்ள மீட்புப் பணியில் ஈடுபட்டிருந்த படகிலேயே கர்ப்பிணி பெண்ணுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
பிகாரில் கடந்த சில நாள்களாக பலத்த மழை பெய்து வருவதால் அங்கு பல்வேறு பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால் ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடுகளை இழந்துள்ளனர். மேலும், லட்சக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாத சூழலில் தவித்து வருகின்றனர்.
இதுபோன்று வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மீட்டு பாதுகாப்பான இடங்களில் சேர்த்து வருகின்றனர். அந்த வகையில், மதுபானி மாவட்டம் பென்னிபட்டி கிராமத்தில் வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் பேரிடர் மீட்புப் படையினர் புதன்கிழமை ஈடுபட்டு வந்தனர்.
அப்போது, அந்த கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணியை மீட்ட பேரிடர் மீட்புப் படையினர், அவரை தங்களின் படகில் கொண்டு சென்று கொண்டிருந்தனர். அப்போது, திடீரென அப்பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்படவே, படகில் இருந்த மருத்துவக் குழுவினர் அவருக்கு உடனடியாக முதலுதவி சிகிச்சை அளித்தனர்.
அப்போது, அந்தப் பெண்ணுக்கு படகிலேயே அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து, தாய் - சேய் இருவரையும் மீட்புப் படையினர், அருகிலிருந்த ஆரம்ப சுகாதார மையத்தில் சேர்த்தனர்.