மும்பை தாக்குதல் பயங்கரவாதி ஹஃபீஸ் சயீதை பாகிஸ்தான் அரசு கைது செய்து வீட்டுக் காவலில் வைத்திருந்தாலும், அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்தால்தான் அந்நாடு நேர்மையாகச் செயல்பட்டதாகக் கருதமுடியும் என்று இந்
தியா கருத்து தெரிவித்துள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் சம்பவத்துக்கு சதித் திட்டம் தீட்டிய முக்கிய குற்றவாளியான ஜமாத் - உத் - தாவா அமைப்பைச் சேர்ந்த ஹஃபீஸ் சயீதை தடை செய்யப்பட்ட பயங்கரவாதியாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அறிவித்திருந்தது. இருப்பினும், பாகிஸ்தானில் பதுங்கியிருந்த அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், பாகிஸ்தானின் லாகூரில் மறைந்திருந்த அவரைக் கண்டறிந்து கைது செய்யுமாறு அந்நாட்டின் பஞ்சாப் மாகாண உள்துறை தற்போது திடீரென உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் ஹஃபீஸ் சயீதை திங்கள்கிழமை தேடிப் பிடித்த பாகிஸ்தான் போலீஸார், அவரை வீட்டுக் காவலில் வைத்தனர். அவரது அமைப்பைச் சேர்ந்த மேலும் நால்வரும் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியா, பாகிஸ்தானின் கைது நடவடிக்கையை விமர்சிக்கவும் இல்லை; அதேவேளையில் பாராட்டவும் இல்லை. இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலால் தடை செய்யப்பட்ட பயங்கரவாதிகள் மீது கடும் நடவடிக்கை எடுப்பதை அனைத்து நாடுகளும் உறுதி செய்ய வேண்டும். இதுதொடர்பாக ஐ.நா. வகுத்த விதிகளை இந்தியா தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறது.
ஹஃபீஸ் சயீதை கைது செய்து பாகிஸ்தான் அரசு வீட்டுக் காவலில் வைத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இதுபோன்ற நடவடிக்கையை கடந்த காலத்திலும் அந்நாடு மேற்கொண்டுள்ளது. எல்லை தாண்டிய பயங்கரவாதச் சதிச் செயல்களில் ஈடுபடும் ஹஃபீஸ் சயீது போன்றோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்பட்சத்தில்தான் பாகிஸ்தானின் நேர்மையான செயல்பாட்டை நாம் உணர முடியும் என்றார் அவர்.