இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பைதான், நாட்டிலேயே பணக்கார நகரம் என்று ஆய்வு அறிக்கை தகவல் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து "நியூ வேர்ல்டு வெல்த்' எனும் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
இந்தியாவிலுள்ள மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 360 லட்சம் கோடி (6.2 டிரில்லியன் டாலர்). இந்தியாவில் 2,64,000 கோடீஸ்வரர்கள் உள்ளனர். 95 மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர்.
இதில் மும்பையில் மட்டும் 46 ஆயிரம் கோடீஸ்வரர்களும், 28 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். மும்பையில் மொத்தம் 54.64 லட்சம் கோடி (820 பில்லியன் டாலர்) மதிப்புச் சொத்துகள் உள்ளன. மும்பைக்கு அடுத்து தில்லி, பெங்களூரு நகரங்கள் 2 மற்றும் 3-ஆவது இடத்தில் உள்ளன. தில்லியில் 23,000 கோடீஸ்வரர்களும், 18 பெரும் கோடீஸ்வரர்களும் இருக்கின்றனர். தில்லியில் மொத்தம் ரூ.29.98 லட்சம் கோடி (450 பில்லியன் டாலர்) மதிப்புச் சொத்துகள் உள்ளன. பெங்களூரில் 7,700 கோடீஸ்வரர்களும், 8 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் வசிக்கின்றனர். பெங்களூரில் ரூ.21.32 லட்சம் கோடி (320 பில்லியன் டாலர்) மதிப்பு சொத்துகள் இருக்கின்றன.
ஹைதராபாதில் ரூ.20.65 லட்சம் கோடி (310 பில்லியன் டாலர்) மதிப்புச் சொத்துகள் உள்ளன. அங்கு 9,000 கோடீஸ்வரர்களும், 6 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் வசிக்கின்றனர். கொல்கத்தாவில் 9,600 கோடீஸ்வரர்கள், 4 மிகப்பெரும் கோடீஸ்வரர்கள் உள்ளனர். கொல்கத்தாவில் ரூ.19.32 லட்சம் கோடி (290 பில்லியன் டாலர்) மதிப்பு சொத்துகள் உள்ளன. புணேயில் 4,500 கோடீஸ்வரர்களும், 5 பெரும் கோடீஸ்வரர்களும் வாழ்கின்றனர். அந்நகரில் ரூ.11.99 லட்சம் கோடி மதிப்புக்கு சொத்துகள் உள்ளன.
சென்னையில்..: சென்னையில் 6,600 கோடீஸ்வரர்களும், 4 மிகப்பெரும் கோடீஸ்வரர்களும் உள்ளனர். சென்னையில் இருக்கும் மொத்த சொத்துகளின் மதிப்பு ரூ. 9.99 லட்சம் கோடி ஆகும்.
அடுத்த 10 ஆண்டுகளில் உள்ளுர் நிதி சேவைத் துறை, தகவல் தொழில்நுட்பத் துறை, மனை வணிகம், சுகாதாரம், மருத்துவம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான வளர்ச்சி ஏற்படும். இதன் மூலம் இந்தியா மேலும் பயனடையும் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.