தமிழ் மக்களின் கலாசார லட்சியங்களை பூர்த்தி செய்ய அனைத்து விதமான நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதுதொடர்பாக சுட்டுரையில் அவர் சனிக்கிழமை வெளியிட்ட பதிவுகளில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
தமிழகத்தின் மேன்மையான கலாசாரத்தைக் கண்டு நாங்கள் மிகவும் பெருமை அடைகிறோம். தமிழ் மக்களின் கலாசார லட்சியங்களை பூர்த்தி செய்யத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு மேற்கொள்ளும்.
தமிழகத்தின் வளர்ச்சிக்கு துணை நிற்க மத்திய அரசு உறுதிபூண்டுள்ளது. வளர்ச்சியில் தமிழகம் புதிய இலக்கை அடைவதை உறுதி செய்யும் பணியில் மத்திய அரசு எப்போதும் ஈடுபட்டுள்ளது என்று சுட்டுரைப் பதிவில் பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி மாநிலம் முழுவதும் மாணவர்களும் இளைஞர்களும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதுதொடர்பாக தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும், பிரதமர் மோடியை சந்தித்துப் பேசினார்.
இதைத் தொடர்ந்து, ஜல்லிக்கட்டுக்கான தடையை நீக்குவது தொடர்பாக அவசரச் சட்டத்தை தயாரித்து மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்தது. அந்த அவசரச் சட்டத்துக்கு, மத்திய அரசு வெள்ளிக்கிழமை இரவு தனது ஒப்புதலை அளித்தது. இந்நிலையில், சுட்டுரையில் பிரதமர் மோடி இவ்வாறு பதிவிட்டுள்ளார்.