ரயில்களில் விற்பனை செய்யப்படும் உணவுகள், கரப்பான் மற்றும் எலிகள் சுற்றித்திரியும் சுகாதார சீர்கேடான இடத்தில் தயாரிக்கப்படுவதாக தலைமைக் கணக்குத் தணிக்கை அலுவலகம் (சிஏஜி) குற்றம்சாட்டியுள்ளது.
மேலும், தரக்குறைவான இத்தகைய உணவுகள், மனிதர்கள் உண்பதற்கு சிறிதும் உகந்ததல்ல என்றும் தெரிவித்துள்ளது.
நாட்டின் பல்வேறு பகுதிகளில் இயங்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட 74 ரயில் நிலையங்கள் மற்றும் 80 ரயில்களில் கடந்த 2013 முதல் 2016-ஆம் ஆண்டு வரை சிஏஜி சார்பில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுதொடர்பான அறிக்கையை சிஏஜி அண்மையில் வெளியிட்டது. அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் மிகவும் சீர்கேடான முறைகளில் உணவுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. சுத்திகரிக்கப்படாத குழாய் தண்ணீரில் மட்டுமே இத்தகைய உணவுகள் தயாரிக்கப்படுகின்றன.
மேலும், கரப்பான் பூச்சிகள் மற்றும் எலிகள் சுற்றித்திரியும் பகுதிகளில்தான் இந்த உணவுகள் சமைக்கப்படுகின்றன. அதுமட்டுமன்றி, அசுத்தமான உணவுகளும், பழைய உணவுகளும் கூட விநியோகிக்கப்படுகின்றன. இதுபோன்ற உணவுகள், மனிதர்கள் உண்பதற்கு சிறிதும் உகந்தவை அல்ல என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.