இந்தியாவில் ஆண்களை விட 25% குறைவான ஊதியம் பெறும் பெண்கள்: ஆய்வில் தகவல்

இந்தியாவில் ஆண்களைவிட பெண்களின் ஊதியம் 25 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இந்தியாவில் ஆண்களைவிட பெண்களின் ஊதியம் 25 சதவீதம் குறைவாக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக வேலைவாய்ப்பு இணையதளமான ’மான்ஸ்டர்.காம்', 2 ஆயிரம் பெண்களிடம் நடத்திய ஆய்வின் முடிவுகள் வருமாறு:
இந்தியாவில் ஆண் ஒருவரின் சம்பாத்தியம் ஒரு மணி நேரத்துக்கு சராசரியாக ரூ.345 என்ற அளவில் இருக்கிறது. அதேவேளையில், பெண்களை பொருத்தவரை இது ரூ.259-ஆக இருக்கிறது.
ஆண்-பெண் சம்பள வித்தியாசம் சராசரியாக 25 சதவீதமாக இருக்கிறது. இது, கடந்த 2015-ஆம் ஆண்டில் 27 சதவீதமாக இருந்தது.
உற்பத்தி துறையில்தான் ஆண்களுக்கும், பெண்களுக்குமான சம்பள இடைவெளி அதிகம் இருக்கிறது. அதாவது, இந்தத் துறையில் ஆண்களை விட பெண்களின் சம்பாத்தியம் 29.9 சதவீதம் குறைவாக இருக்கிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் 25.8 சதவீதம், வங்கி மற்றும் நிதித் துறையில் 21.5 சதவீதம், கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறையில் 14 சதவீதம் என்ற அளவுகளில் ஆண்-பெண் சம்பள வேறுபாடு உள்ளது.
ஆண்-பெண் சம்பள இடைவெளியை குறைக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வந்தாலும், அனைத்து துறைகளிலும் ஆண்களுக்கே பதவி உயர்வுகளும், இதர வாய்ப்புகளும் வழங்கப்படுகின்றன; பெண்கள் பாரபட்சமாக நடத்தப்படுவது தொடர்கதையாகி வருகிறது என்பதே 68.5 சதவீத பெண்களின் கருத்தாக உள்ளது.
மகப்பேறு, குழந்தைகளை கவனிப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக பெரும்பாலான பெண்கள் தங்களது வேலையை துறப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக மான்ஸ்டர்.காம் இணையதள மேலாண் இயக்குநர் சஞ்சய் மோடி கூறுகையில், ’இந்தியாவில் ஆண்-பெண் சம்பள இடைவெளியை குறைப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. பெண்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சிகள் அளிப்பதுடன் அதிக வேலைவாய்ப்புகள் வழங்க வேண்டும்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com